search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார்.
    X
    மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார்.

    தமிழக அரசை கேட்காமல் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்- மத்திய அரசு உறுதி

    தமிழக அரசை கேட்காமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 3 நாள் பயணமாக டெல்லி சென்று இருந்தார்.

    மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை, துரைமுருகன் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.

    அப்போது, தமிழ்நாட்டின் நீர்வளம் சம்பந்தமான பிரச்சனைகளை விவாதித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை விரைவாக நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக கோரிக்கை மனுவினையும் துரைமுருகன் கொடுத்தார். அப்போது, தமிழக பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கஜேந்திரசிங் ஷெகாவத்திடம், துரைமுருகன் கொடுத்த கோரிக்கை மனுவில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * காவிரியில் தமிழ்நாட்டுக்கு மாதாந்திர வாரியாக நீரை பிலிகுண்டுலுவில் அளிப்பதற்கு கர்நாடக அரசை வலியுறுத்தவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் நீர் அளிப்பதை இறுதி செய்யவும், ஜல்சக்தி அமைச்சகம் தேவையான அறிவுரைகள் வழங்கவேண்டும்.

    * காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டம் தமிழகத்துக்கு பாதகத்தை விளைவிக்கும். இந்த திட்டம் தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிரானது. இந்த திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் கொடுக்கக்கூடாது.

    * பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது பற்றியும் மற்றும் பெண்ணையாற்றின் குறுக்கே சில கட்டுமானங்களையும், நீர் இரைத்தலையும் தவிர்க்கவும், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டு 2019 -ல் ஆணையிட்டுள்ளபடி விரைவில் நடுவர் மன்றம் அமைக்கவேண்டும்.

    * முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்துவதற்கு சிற்றணை மற்றும் மண் அணை ஆகியவற்றை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 23 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும். தாமதிக்காமல் இருக்க கேரள அரசுக்கு அறிவுரை வழங்கவும், அணைக்கு செல்ல வனப்பகுதியில் உள்ள சாலையை சரிசெய்ய உடன் அனுமதி அளிக்கவும், கேரள அரசை வலியுறுத்தவேண்டும்.

    * காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்து 3 வருடங்கள் ஆகிறது. அதற்கு ஒரு நிரந்தர தலைவரை இன்னும் மத்திய அரசு நியமிக்கவில்லை. எனவே ஆணையத்துக்கு தேவையான முழு நேர தலைவரை உடனே நியமிக்கவேண்டும்.

    * கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி இணைப்பு திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 83 டி.எம்.சி.க்கும் கூடுதலாக நீர் ஒதுக்கவேண்டும். தமிழ்நாட்டில் இணைப்பு கால்வாயை உயர் மட்டத்தில் எடுத்துச்சென்று கல்லணையில் இணைக்காமல் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கட்டளை கதவணையில் இணைக்கவேண்டும். இந்த திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த இணைப்புதிட்டத்தை இறுதி செய்து உடனே தேசிய திட்டமாக செயல்படுத்தவேண்டும்.

    * தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நிதியளிக்க நீண்டகாலமாக தமிழ்நாடு அரசு மத்திய அரசை கேட்டு வருகிறது. இது வெள்ளநீரை உபயோகிக்க கூடிய பயனுள்ள திட்டமாகும். இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் நிதி இன்னும் அளிக்கப்படவில்லை. இந்த பயனுள்ள திட்டத்தை விரைவில் முழுமையாக முடிக்க நிதி வழங்கவேண்டும். இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.712 கோடி செலவிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதியாக ரூ.487 கோடி (60 சதவீதம்) உடனே வழங்கவேண்டும்.

    * இதேபோல் நீர்நிலைகளை செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்த திட்டத்துக்கு உரிய நிதி ரூ.34.25 கோடி மட்டும் தான் அளிக்கப்பட்டுள்ளது. மீதி ரூ.44.48 கோடி மத்திய அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிதியை உடன் அளிக்க வலியுறுத்தப்பட்டது.

    மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

    சந்திப்பை தொடர்ந்து தமிழக அரசு இல்லத்துக்கு திரும்பிய துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மந்திரியுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. நாங்கள் கொண்டு சென்ற பிரச்சனையை அவர் மிகவும் தெளிவாக புரிந்து வைத்திருந்தார். காவிரியில் இருந்து இந்த மாதம் இவ்வளவு தண்ணீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இதுவரை நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை.

    ஜூன், ஜூலை மாதம் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரில் நேற்று வரை 5.67 டி.எம்.சி. பற்றாக்குறை உள்ளது. அதை வழங்க கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டோம். இதுபற்றி உடனே பேசுவதாக அவர் கூறினார்.

    நடுவர்மன்ற உத்தரவிலும் சரி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிலும் சரி. காவிரியில் கர்நாடக அரசு எந்த ஒரு காரியத்தை செய்ய வேண்டியிருந்தாலும் தமிழக அரசை கேட்டுத்தான் செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எந்த உத்தரவும் பெறாமல், எந்த அறிவிப்பும் செய்யாமல் நேரடியாக மத்திய அரசை அணுகி, மத்திய நீர்வள ஆணையத்திடம் மேகதாது அணை திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி பெற்று உள்ளனர். மத்திய அரசை பொறுத்தவரை இது சரியான அணுகுமுறை அல்ல, அனுமதி கொடுத்தது தவறு என்று சொன்னோம்.

    உடனே மந்திரி சொன்னார், “விரிவான திட்ட அறிக்கை பெற்றதால் அவர்கள் அணை கட்டி விடுவார்கள் என்பது கிடையாது. எத்தனையோ விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டு உள்ளன. அவை எல்லாம் நடந்து விடுவது இல்லை. எனவே இந்த விஷயத்தில் தமிழகத்தை கேட்காமல் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் அணை கட்டுவார்கள் என்ற நம்பிக்கையை விட்டு விடுங்கள். அது ஒரு பிரச்சனையில்லை” என்று சொல்லிவிட்டார்.

    தற்போது மார்கண்டேய நதியில் ஒரு அணை கட்டியிருக்கிறார்கள். மேகதாது அணைக்காவது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஆனால் மார்கண்டேய நதியில் அணை கட்ட எந்த அனுமதியும் பெறவில்லை. ‘தன்னிச்சையாக அணை கட்டுகிறார்களே, இதற்கு என்ன அர்த்தம்?’ என்று கேட்டோம்.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றபோது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அதை அமைக்க இதுவரை கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நடுவர்மன்றம் அமைப்பதில் என்ன தயக்கம் இருக்கிறது? என்றும் மந்திரியிடம் கேட்டோம். உடனே அவர் அதிகாரிகளை அழைத்து பேசி, நடுவர் மன்றம் அமைப்பதற்கு உத்தரவிடுவதாக தெரிவித்தார்.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
    Next Story
    ×