search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனா காலத்தில் நம்பிக்கையின் ஒளிக்கதிராக யோகா விளங்குகிறது - மோடி புகழாரம்

    கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துடன் யோகா பயிற்சியை இணைக்கும் வகையில், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து ‘எம்-யோகா’ என்ற செல்போன் செயலி ஒன்றை பிரதமர் மோடி அறிவித்தார்.
    புதுடெல்லி:

    அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானது, யோகா. மனித குலத்தின் நலம் பேணும் அற்புதமான இந்த கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிரணாயாம மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் நேற்று சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடந்தன.

    சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது யோகாவின் நன்மைகளை அவர் எடுத்துரைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெல்லியில் உள்ள யமுனா நதியில் பொதுமக்கள் யோகாசனம் செய்ததை படத்தில் காணலாம்.


    இந்தியாவிலும், உலகம் எங்கிலும் கடந்த 1½ ஆண்டுகளாக எந்தவொரு பெரிய பொது நிகழ்வுகளும் நடக்கவில்லை. என்றாலும் யோகா தினத்தின் உற்சாகம் குறையவில்லை. யோகா தினம் அவர்களின் கலாசாரத்துடன் இணைந்ததல்ல. எனவே இந்த நாட்களில் மக்கள் அதை மறந்து புறக்கணித்திருக்க முடியும். மாறாக யோகா மீதான அவர்களின் ஆர்வமும், அன்பும் அதிகரித்து உள்ளது.

    கண்ணுக்குத்தெரியா கொரோனா வைரஸ் உலகின் கதவுகளை தட்டியபோது, அதை எதிர்கொள்வதற்கு வளம், திறன் மற்றும் மன உறுதி அடிப்படையில் எந்த நாடும் தயாராகவில்லை.

    இந்திய கப்பற் படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஐராவத் போர்கப்பலில் வீரர்களும், ஊழியர்களும் யோகாசனம் செய்த காட்சி.


    இந்த கடினமான காலத்தில் உள் வலிமையின் சிறந்த ஆதாரமாக யோகா மாறியிருப்பதை நாம் அனைவரும் பார்த்தோம். ஏனெனில் நமக்கு வெளியில் பல பிரச்சினைகள் இருந்தாலும், நமக்குள் எல்லையற்ற தீர்வுகள் இருப்பதை யோகா நமக்கு எடுத்துரைக்கிறது.

    கொரோனா தொற்றுக்கு எதிராக மொத்த உலகமும் போராடி வரும் இந்த நேரத்தில், நம்பிக்கையின் ஒளிக்கதிராக இன்னும் யோகாவே விளங்குகிறது. கடந்த 1½ ஆண்டுகளாக உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருந்து லட்சக்கணக்கான புதிய யோகா பயிற்சியாளர்கள் உருவாகி இருப்பது இதை நிரூபிக்கிறது.

    ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் யோகா அமர்வுகள் நடத்துவதும், சுவாச அமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு மூச்சுப்பயிற்சிகளின் முக்கியத்துவத்தை நிபுணர்கள் விளக்கும் பல நிகழ்வுகள் நம்மைச்சுற்றி நடந்து வருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். இந்த கடினமான நாட்களில் தங்களின் பாதுகாப்பு கவசமாக யோகா இருப்பதாக முன்கள பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் பலர் என்னிடம் கூறியுள்ளனர்.

    சர்வதேச யோகா தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோகாசனம் செய்தார்.


    பெருந்தொற்றுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு சர்வதேச யோகா தின கருப்பொருளான ‘ஆரோக்கியத்துக்கான யோகா’, மக்களின் மனவலிமையை அதிகரித்து இருக்கிறது. ஒவ்வொரு நாடு, சமூகம் மற்றும் தனிநபர் என அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். நாம் ஒன்றிணைந்து ஒருவரையொருவர் பலப்படுத்துவோம்.

    மன அழுத்தத்தில் இருந்து மன வலிமைக்கும், எதிர்மறையில் இருந்து படைப்பாற்றலுக்கான வழியை யோகா நமக்கு காட்டுகிறது.

    பிரணாயாமா போன்ற யோகா பயிற்சிகளுடன் பல பள்ளிகள் தற்போது ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன. இது குழந்தைகள் உடல் ரீதியாக கொரோனாவை எதிர்கொள்ள தயார்படுத்துகிறது.

    பல்லாண்டுகளாக இந்தியா பின்பற்றி வந்த ‘வாசுதேவ குடும்பகம்' என்ற மந்திரம் இப்போது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் நல்வாழ்வுக்காக ஜெபிக்கிறோம்.

    யோகா அனைவருக்கும் ஒரு தீர்வைக் கொண்டிருப்பதால் நாம் தொடர்ந்து யோகாவின் கூட்டு பயணத்தில் செல்ல வேண்டும். யோகா தனது அடிப்படையிலேயே ஒவ்வொரு நபரையும் சென்றடைவது முக்கியம்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    முன்னதாக கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துடன் யோகா பயிற்சியை இணைக்கும் வகையில், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து ‘எம்-யோகா’ என்ற செல்போன் செயலி ஒன்றை பிரதமர் மோடி அறிவித்தார். பொதுவான யோகா நெறிமுறை அடிப்படையில் இந்த செயலியில் யோகா பயிற்சி வீடியோக்கள் பல்வேறு மொழிகளில் கிடைக்கும் என அவர் கூறினார்.

    இதற்கிடையே உலக யோகா தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். உலகுக்கு இந்தியா வழங்கிய மிகப்பெரிய பரிசுகளில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக காணொலி மற்றும் மெய்நிகர் முறையில் இந்த கொண்டாட்டங்கள் அமைந்தன.

    இதைப்போல உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி சமூக இடைவெளியை பின்பற்றி ஆசனங்களை செய்து அசத்தினர்.

    நேபாளத்தில் இந்திய தூதரகம் சார்பில் காட்மாண்டுவில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது.
    Next Story
    ×