search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் பாஸ்கர் ராவுடன், அவருடைய மனைவி டாக்டர் பாக்கியலட்சுமி.
    X
    டாக்டர் பாஸ்கர் ராவுடன், அவருடைய மனைவி டாக்டர் பாக்கியலட்சுமி.

    கொரோனாவால் நுரையீரல் பாதித்த டாக்டருக்கு உதவ ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள்

    டாக்டர் பாஸ்கர் ராவின் சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் ஆந்திர அரசே ஏற்கும் என அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் பாஸ்கர் ராவ் (வயது 38). இவர் ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (34). டாக்டரான இவர், குண்டூர் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கரஞ்சேடு கிராம மக்களுக்கு இரவு, பகலாக மருத்துவ சேவை புரிந்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.

    இந்நிலையில், இருவரும் கடந்த ஏப்ரல் 24-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாக்கியலட்சுமி கொரோனாவில் இருந்து விடுபட்டார். ஆனால், பாஸ்கர்ராவ் தீவிர நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். முதலில் அவர், குண்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து விஜயவாடா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மேல் சிகிச்சைக்காக ரூ.2 கோடி வரை செலவாகலாம் எனவும் கூறினர்.

    கொரோனா வைரஸ்


    இதை கேட்டு அவரது மனைவி பாக்கியலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவும், சிறிதளவு பணத்தை திரட்டி, அங்கிருந்து ஐதராபாத் கச்சிபல்லி ஆஸ்பத்திரியில் கணவரை சேர்த்தார். மேலும் தனக்கு தெரிந்த சிலர் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் பணத்தை திரட்ட முடிவு செய்தார்.

    தங்களது கிராமத்துக்கு இரவும், பகலும் அயராது மருத்துவ சேவை புரிந்த டாக்டர் பாஸ்கர் ராவ் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் எனும் தகவல் கரஞ்சேடு கிராம மக்களுக்கு எட்டியது. அதிர்ச்சியுற்ற அவர்கள் அனைவரும் ஒன்று கூடி டாக்டருக்கு உதவ முடிவு செய்தனர்.

    அதன்படி, பலர் தங்களால் முடிந்த அளவு பணத்தை சேர்த்தனர். பலர் சேமிப்பு பணத்தை கூட டாக்டரின் உயிர் காக்க கொடுக்க முன் வந்தனர். அதன்படி ரூ.20 லட்சம் வரை சேர்ந்தது. அவற்றை டாக்டர் பாக்கியலட்சுமியிடம் கொடுத்து, இந்த பணத்தை வைத்துக்கொண்டு மருத்துவ செலவை கவனியுங்கள் என கூறினர்.

    டாக்டர் பாஸ்கர்ராவ் பாதிக்கப்பட்டது குறித்து ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெரியவந்தது. உடனே அவர், பாஸ்கர் ராவின் சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
    Next Story
    ×