search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரமேஷ் ஜார்கிகோளி
    X
    ரமேஷ் ஜார்கிகோளி

    ஆபாச சி.டி. விவகாரத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படுவாரா?

    ஆபாச சி.டி. விவகாரத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படுவாரா? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
    பெங்களூரு :

    முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோ கடந்த மார்ச் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரமேஷ் ஜார்கிகோளி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் அரசியலில் தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் போலியாக வீடியோ தயாாிக்கப்பட்டு இருப்பதுடன் தன்னிடம் பணம் கேட்டு சிலர் மிரட்டுவதாக ரமேஷ் ஜார்கிகோளி சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இளம்பெண், ரமேஷ் ஜார்கிகோளி கொடுத்த புகார்களின் பேரில் பதிவான வழக்குகள் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். ஆனாலும் கொரோனா பாதிப்பு மத்தியிலும் ரமேஷ் ஜார்கிகோளியிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர். இதுவரை ஆபாச வீடியோவில் இருப்பது தான் இல்லை, அது போலியாக சித்தரிக்கப்பட்டது என ரமேஷ் ஜார்கிகோளி கூறி வந்திருந்தார்.

    ஆனால் தற்போது போலீசாரிடம், இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோவில் இருப்பது நான் தான் என்பதை ரமேஷ் ஜார்கிகோளி ஒப்புக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் இளம்பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாக தான் கூறவில்லை என்றும், அவரை கற்பழிக்கவில்லை என்றும், இளம்பெண்ணின் சம்மதத்துடன் தான் நெருக்கமாக இருந்ததாகவும் ரமேஷ் ஜார்கிகோளி போலீசாரிடம் சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.

    இது ஆபாச வீடியோ விவகார வழக்கில் திடீர் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் பதிவாகி உள்ள கற்பழிப்பு வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில், ஹனிடிராப் முறையில் இந்த வழக்கில் அவரை சிக்க வைத்திருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

    ஏனெனில் இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருப்பதை தனக்கு தெரியாமல் வீடியோ எடுத்திருப்பதாக ரமேஷ் ஜார்கிகோளி போலீசாரிடம் கூறியுள்ளார். அதே நேரத்தில் இளம்பெண்ணின் நண்பர்கள் மற்றும் நரேஷ்கவுடா, ஸ்ரவன் உள்ளிட்டோர் ரமேஷ் ஜார்கிகோளியிடம் வீடியோவை வெளியிடுவதாக கூறி பல கோடி ரூபாய் பணம் வசூலித்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இதனால் ஹனிடிராப் முறையில் இந்த வழக்கை விசாரித்தால் ரமேஷ் ஜார்கிகோளி கைதாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் தான் என்று ரமேஷ் ஜார்கிகோளி ஒப்புக் கொண்டு இருப்பதால், சிறப்பு விசாரணை குழு போலீசார் அடுத்த எந்த கோணத்தில் விசாரணையையை தொடங்க உள்ளார்கள் என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி சிறப்பு விசாரணை குழு போலீசார், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அதே நேரத்தில் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வருகிற 31-ந் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது கோர்ட்டு கூறும் வழிகாட்டுதலின்படி போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. ரமேஷ் ஜார்கிகோளி மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டால், உடனடியாக அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
    Next Story
    ×