search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்தினால் கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்: மந்திரி சுதாகர்

    ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்தினால் கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் சிலரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கர்நாடகத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு 1,150 ஆம்போடெரிசின் மருந்து குப்பிகளை கர்நாடகத்திற்கு ஒதுக்கியுள்ளது.

    இன்னும் ஓரிரு நாளில் மேலும் 1,000 மருந்து குப்பிகள் கர்நாடகத்திற்கு வரவுள்ளது. இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதற்கான காரணம் என்ன என்பதை அறிய ஒரு மருத்துவ நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அதிகளவில் ஸ்டிராய்டு மருந்தை பயன்படுத்துவது, சுத்தப்படுத்தாமல் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது, ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்துவது, படுக்கையை நீண்ட காலம் பயன்படுத்துவது போன்றவற்றால் இந்த நோய் பரவுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    கொரோனா ஆஸ்பத்திரிகளில் புதுப்பிக்கும் பணிகளை நிறுத்துமாறும் நிபுணர் குழு ஆலோசனை கூறியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், மருத்துவ வசதிகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பரிசோதனை நடத்த வேண்டும் என்று நிபுணர் குழு கூறியுள்ளது. அவர்களுக்கு 3-வது நாள், 7-வது நாள், 21-வது நாளில் இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.

    சுகாதாரத்துறையில் ஆஷா ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்கள் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். கர்நாடகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தரமான உடல் கவச உடைகள் உள்ளன. அதன் தரம் குறித்த வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×