search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரமேஷ் ஜார்கிகோளி
    X
    ரமேஷ் ஜார்கிகோளி

    ஆபாச சி.டி. விவகாரம்: வீடியோவில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் தான்- ரமேஷ் ஜார்கிகோளி

    கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் தான் என்று போலீசாரிடம் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. இவர், ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து முதன் முதலில் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு ஆதரவாகவும், ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராகவும் புகார் கொடுத்தார்.

    பின்னர் அவர் கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதுபோல், தனக்கு எதிராக சதி செய்யப்பட்ட ஆபாச வீடியோ வெளியிட்டு இருப்பதாகவும், அரசியலில் தன்னை பழிவாங்க போலியாக வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டு இருப்பதாகவும் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீஸ் விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டது.

    அதன்பேரில், பெங்களூரு சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த இளம்பெண் ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில், அவர் மீது கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனால் ரமேஷ் ஜார்கிகோளி கைதாக உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கில் இளம்பெண்ணிடம் 6 நாட்கள் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றிருந்தனர். மேலும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் 2-வது முறையும் ஆஜராகி இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் போலீசார் விசாரித்து முதலில் தகவல்களை பெற்றிருந்தார்கள். ஆனால் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவான பின்பு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    மேலும் விசாரணைக்கு ஆஜராக கோரி போலீசார் நோட்டீசு அனுப்பியும், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராகாமல் இருந்து வந்தார். பின்னர் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமானதால் ஆபாச வீடியோ விவகாரத்தை போலீசார் விசாரணை நடத்தாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஆபாச வீடியோ விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஆபாச வீடியோவில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் தான் என்று முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி போலீசாரிடம் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதாவது ஆபாச வீடியோவில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் அல்ல என்றும், அது போலியான வீடியோ என்றும் ரமேஷ் ஜார்கிகோளி கூறி வந்தார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ரமேஷ் ஜார்கிகோளியிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அப்போது ஆபாச வீடியோவில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் தான் என்றும், அந்த இளம்பெண் தனக்கு நன்கு அறிமுகம் ஆனவர் என்றும் போலீசாரிடம் ரமேஷ் ஜார்கிகோளி கூறி இருப்பதாக தெரிகிறது.

    மேலும் கர்நாடகத்தில் உள்ள அணைகள் குறித்து குறும்படம் எடுக்க தன்னை அணுகியதாகவும், அப்போது தங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாகவும், இளம்பெண்ணின் சம்மதத்துடன் தான், அவருடன் நெருக்கமாக இருந்தாகவும், அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும், தனக்கு தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரமேஷ் ஜார்கிகோளி போலீசாரிடம் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது ஆபாச வீடியோ விவகாரத்தில் திடீர் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த இளம்பெண் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதனால் ஆபாச வீடியோ விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    Next Story
    ×