search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    26-ந் தேதி நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு

    வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த விவசாயிகள் விடுத்த அழைப்புக்கு தி.மு.க. உள்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
    புதுடெல்லி:

    விவசாயிகள் நலனுக்காக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ந் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. அன்றைய தினம் போராட்டம் நடத்தவும் கோரியுள்ளது.

    இந்தநிலையில், அவர்களின் போராட்ட அழைப்புக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சோனியா காந்தி (காங்கிரஸ்), தேவேகவுடா (மதச்சார்பற்ற ஜனதாதளம்), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), உத்தவ்தாக்கரே (சிவசேனா), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்) ஆகியோர் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் போராட்டத்தின் 6 மாத நிறைவையொட்டி, சம்யுக்தா கிசான் மோர்ச்சா விடுத்த போராட்ட அழைப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு, விவசாயிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

    வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் அளிக்க வேண்டும். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். கடந்த 12-ந் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×