search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    கொரோனா பரவல் எதிரொலி - கர்நாடகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு இன்று முதல் அமல்

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனாவால் இறப்பவர்களின் தினசரி எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இது கர்நாடக அரசை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. மாநில அரசு ஏற்கனவே பல்வேறு விலக்குகளுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடந்த மாதம் அமல்படுத்தியது. ஆனாலும் அவை வைரஸ் பரவலை குறைக்க உதவவில்லை. எனவே அந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சனிக்கிழமை வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, கர்நாடகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என முதல் மந்திரி எடியூரப்பா அறிவித்திருந்தார். இந்த முழு ஊரடங்கு 14 நாட்களுக்கு அதாவது வரும் 24-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அவர் அறிவித்தார்.

    இந்நிலையில், கர்நாடகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டுப்பாடுகள் 14 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
     
    இந்த ஊரடங்கின்போது, மதுக்கடைகள், உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. உணவுகளை பார்சல் மூலம் வாங்கி செல்லலாம். இவற்றை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் நடந்தே வர வேண்டும். மதுபானங்களை பார்சல் மூலம் வாங்கி செல்லலாம். வாகன போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை என 4 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் நடந்தே தான் வர வேண்டும். வாகனங்களில் வந்தால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கொரோனா பரிசோதனை

    மருந்து கடைகள், மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படும். அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் வாகனங்களில் செல்ல தடை இல்லை. ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள், வாடகை கார்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய ஆவணங்களை போலீசாரிடம் காட்ட வேண்டும்.

    இந்த ஊரடங்கை போலீசார் மிக தீவிரமாக அமல்படுத்த முடிவு எடுத்துள்ளனர். அதனால் வெளியில் செல்ல விரும்புபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் முக்கிய சந்திப்புகளில் தற்காலிக கூடாரங்களை அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    அரசு-தனியார் பஸ்கள் இயக்கத்திற்கு அனுமதி இல்லை. பொதுமக்களோ அல்லது வாகனங்களோ ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல அனுமதி இல்லை. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

    அதே நேரத்தில் மாநிலத்திற்குள் சரக்கு வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை இல்லை. மாநிலங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்து வாகனங்கள் எப்போதும் போல் இயங்கும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் வாகனங்களை பயன்படுத்தலாம்.

    ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். பெங்களூருவில் பிரதான சாலைகளில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து மூடியுள்ளனர். அவசர சேவை வாகனங்கள் செல்வதற்காக ஒரு பாதையை மட்டும் திறந்து வைத்துள்ளனர். மொத்தத்தில் இந்த 14 நாட்கள் ஊரடங்கை போலீசார், கடந்த 2020-ம் ஆண்டை போல் தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×