search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    இது நியாயமல்ல... தேர்தல் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி குறித்து நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
    புதுடெல்லி:

    கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். மேலும், தேர்தல் நேரத்தில் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் தவறில்லை என்றும் கடுமையாக குற்றம்சாட்டினர்.

    தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட் கூறிய இந்த கடுமையான கருத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் முறையீடு செய்தது. கொரோனா தொற்றுநோயின் கொடிய இரண்டாவது அலைக்கு மத்தியில் வாக்கெடுப்புகளை நடத்தியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கருத்து, தேர்தல் ஆணையத்தை இழிவுபடுத்தும் கருத்துக்கள் என்று தேர்தல் ஆணையம் தனது மனுவில் கூறியிருந்தது.

    தேர்தல் ஆணையம்

    மேலும் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்படும் கருத்துக்களை வெளியிடுவதற்கு ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

    இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம்  மீது கொலைக்குற்றம் சுமத்தலாம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்து கடுமையானது என கூறிய நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்  என அறிவுறுத்தினர். அதேசமயம், தேர்தல் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    ‘உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி குறித்து நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற கருத்துகளை செய்தியாக்குவதை தடை விதிக்க கோருவதில் நியாயமில்லை. நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை செய்தியாக்க கூடாது என ஊடகங்களை கூற முடியாது. நீதிமன்றங்களில் நடப்பது பற்றி செய்தி சேகரிப்பதும் ஊடக சுதந்திரம்தான்’ என நீதிபதிகள் கூறினர்.
    Next Story
    ×