search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு- பக்தர்களுக்கு மட்டும் அனுமதி

    கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் நேற்று 1,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பதியில் மட்டும் 382 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12-ந்தேதி முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளும் 30 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

    கொரேனா வைரஸ்

    இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருப்பதியில் இரவு நேர ஊரடங்கை இன்று முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை திருப்பதி நகரப் பகுதி முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

    இன்று இரவு 7 மணிக்கு மேல் பஸ், கார், ஆட்டோ, பைக் உள்பட எந்த வாகனங்களும் செல்ல அனுமதியில்லை.

    மார்க்கெட் கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி பஸ் நிலையத்திலிருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருமலைக்கு வரும் பக்தர்கள் திருப்பதியில் எந்த பகுதியிலும் சுற்றி வர கூடாது. திருப்பதி பஸ் நிலையத்திற்கு வரும் பக்தர்கள் உடனடியாக அங்கு தயார் நிலையில் உள்ள பஸ்கள் மூலம் திருமலைக்கு ஏற்றி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருமலையில் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அங்கு ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் சாமி படங்கள் விற்பனை செய்யும் கடைகள் வழக்கம் போல் இயங்கும்.

    Next Story
    ×