search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமை - ராகுல்காந்தி

    தலைநகர் டெல்லியில், அதிகரிக்கும் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக நேற்று முன்தினம் இரவு முதல் 6 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா சூழலால் இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    தலைநகர் டெல்லியில், அதிகரிக்கும் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக நேற்று முன்தினம் இரவு முதல் 6 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தீவிர கட்டுப்பாடுகளும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். அவர்களில் பலர், சொந்த ஊர் செல்வதற்காக அங்குள்ள ஆனந்த்விகார் பஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

    பிரதமர் மோடி


    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் இடம்பெயரத் தொடங்கியிருக்கின்றனர். இதுபோன்ற சூழலில், அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமை. ஆனால் கொரோனா பரவலுக்கு பிறரை குற்றம்சாட்டும் அரசு, இதுபோன்ற பொது உதவி நடவடிக்கையை எடுக்குமா?’ என்று கேட்டுள்ளார்.

    மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி இல்லை. இடைத்தரகர்களோ எவ்வித விலைக் கட்டுப்பாடும் இல்லாமல் தடுப்பூசிகளை வாங்கி வருகின்றனர். சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இது மத்திய அரசின் தடுப்பூசி வினியோகத் திட்டம் இல்லை, தடுப்பூசி பாகுபாட்டுத் திட்டம்’ என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ‘கொரோனா சூழல் மோசமாகிவந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிப்பு போன்ற கடுமையான முடிவுகளை அரசு எடுக்க நேரிடும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் மீண்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள்பாட்டை தாங்களே பார்த்துக்கொள்ளும்படி விடப்பட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இதுவா உங்கள் திட்டம்? கொள்கைகள் என்பவை, எல்லோரது நலத்திலும் கவனம்கொள்வதாக இருக்க வேண்டும். ஏழைகள், தொழிலாளர்கள், தெரு வியாபாரிகளுக்கு நிதி உதவி என்பது தற்போதைய அவசியத் தேவை. தயவுசெய்து அதைச் செய்யுங்கள்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×