search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வாரியர்ஸ்
    X
    கொரோனா வாரியர்ஸ்

    கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு

    கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் சுகாதார பணியாளர்கள் முன்களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் கொரோனா போர்வீரர்கள் என்றே (கொரோனா வாரியர்ஸ்) அழைக்கப்படுகிறார்கள்.
    புதுடெல்லி:

    கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளை மீட்டெடுப்பதில் மருத்துவ உலகம் முக்கிய பங்காற்றுகிறது.

    அந்தவகையில் கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் சுகாதார பணியாளர்கள் முன்களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் கொரோனா போர்வீரர்கள் என்றே (கொரோனா வாரியர்ஸ்) அழைக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு கொரோனாவுடன் அன்றாடம் போராடி வரும் இவர்களும் அவ்வப்போது கொரோனா தாக்கி மரணத்தை தழுவுவது உண்டு. பலர் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வருகின்றனர்.

    இப்படி கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.

    மத்திய அரசு


    பிரதான் மந்திரி கரிப் கல்யான் தொகுப்பு எனப்படும் இந்த காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது கொரோனா பணிகளில் ஈடுபட்டு இருக்கும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் 3 முறை நீட்டிக்கப்பட்டது. இதில் 3-வது முறை நீட்டிக்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தின் கால அளவு வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    எனவே 24-ந்தேதிக்குப்பிறகு புதிய காப்பீடு திட்டம் சுகாதார பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்து உள்ளது. இதற்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவுடன் போராடும் சுகாதார ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதில் இந்த திட்டம் ஒரு முக்கியமான உளவியல் பங்கைக் கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளது.

    கொரோனா போர்வீரர்களின் இந்த காப்பீட்டு திட்டம் வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனக்கூறியுள்ள சுகாதார அமைச்சகம், அதைத்தொடர்ந்து ஒரு புதிய காப்பீட்டுக்கொள்கை பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
    Next Story
    ×