search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.கே.சிவக்குமார்
    X
    டி.கே.சிவக்குமார்

    பொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடும் மத்திய-மாநில அரசுகள்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

    மத்திய-மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுக்காமல் பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்துடன் விளையாடுகின்றன என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அமல்படுத்த முடியாத வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. மணி அடியுங்கள், கை தட்டுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தபோது பொதுமக்கள் அதை செய்து காட்டினர்.

    ஆனால் மத்திய-மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுக்காமல் பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்துடன் விளையாடுகின்றன. மாநில அரசு, சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு விஷயங்களில் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். பொருளாதார ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    தேர்வுகள் இன்றி மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுகிறார்கள். இது எதிர்காலத்தில் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை தேடும்போது பிரச்சினை ஏற்படும். இதற்காக மாநில அரசு ஒரு தெளிவான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். 6 மாதங்களுக்கு வங்கி கடன்கள் மீதான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தவணை செலுத்த விலக்கு அளிக்க வேண்டும்.

    கொரோனா வைரஸ்

    சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டும். கொரோனா நெருக்கடியால் மக்கள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது இந்த அரசு கருணை காட்டவில்லை. சொத்து வரி, மின் கட்டணம், பெட்ரோல்-டீசல் கட்டணம், உர விலையை உயர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி. வரியை காலதாமதமாக செலுத்துவதற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

    கல்வித்துறையில் நகரங்களில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால் கிராமப்புற குழந்தைகளின் நிலை குறித்து அரசு யோசிக்கவில்லை. வேலைகள் பறிபோய் உள்ளன. எந்தெந்த துறையில் எவ்வளவு வேலைகள் போய் உள்ளன என்பது குறித்த புள்ளி விவரங்கள் அரசிடம் இல்லை. கொரோனா முதல் அலைக்கு பிறகு அதன் 2-வது அலை வரும் என்று அரசுக்கு மதிப்பிட்டு இருந்தது. ஆனால் அதனை எதிர்கொள்ள போதுமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    அதிகாரிகள், மந்திரிகளை மாற்றுவதிலேயே அரசு நேரத்தை செலவிட்டுள்ளது. இன்று பிணத்தை எரியூட்ட கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை கர்நாடகத்தில் நிலவுகிறது. மருத்துவமனைகளில் மருந்து, படுக்கைகள் இல்லை. மந்திரிகள், அதிகாரிகள் தங்களின் அலுவலகங்களை விட்டு வெளியே செல்லவில்லை. மாவட்டங்களில் மோசமான நிலை நிலவுகிறது.

    அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பஸ் போக்குவரத்து முடங்கியுள்ளது. அரசு சுயகவுரவம் பார்க்காமல் ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    Next Story
    ×