search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    3-வது டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா? - நிபுணர்கள் பதில்

    இந்தியாவில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவ்விரு தடுப்பூசிகளும் 2 டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    புதுடெல்லி:

    3-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும், 3-வது டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு.

    இந்தியாவில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவ்விரு தடுப்பூசிகளும் 2 டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோசை பெற்ற 4 வாரங்களுக்கு பின்னர் 2-வது டோஸ் பெற வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி என்றால் அதன் முதல் டோஸ் போட்டு 6 வாரங்கள் முதல் 8 வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்.

    தடுப்பூசி


    இந்த நிலையில், பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள், தங்களது தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொண்ட பினனர் ஒரு கூடுதல் டோஸ் (பூஸ்டர் டோஸ்) தேவைப்படலாம், அதன்பின்னர் ஆண்டுக்கு ஒரு முறையும் போட்டுக்கொள்ளும் தேவை எழலாம் என கூறின.

    இதற்கிடையே இந்த மாதத்தின் தொடக்கத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாவது டோசை பரிசோதனை அடிப்படையில் தன்னார்வலருக்கு வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனரக நிபுணர் குழு, அனுமதி அளித்தது.

    2 டோஸ் எடுத்துக்கொண்டு 6 மாதங்களுக்கு பின்னர் கூடுதலாக ஒரு டோஸ் (பூஸ்டர் டோஸ்) எடுத்துக்கொள்ளலாம் என பாரத் பயோடெக் நிறுவனம் முன்மொழிந்தது.

    ஆனால் 3-வது டோஸ் தடுப்பூசியின் பொருந்தக்கூடிய தன்மை மற்றும் செயல்திறன் பற்றி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், இரண்டாவது அலை வீசி வருகிற நிலையில், மூன்றாவது டோஸ் தடுப்பூசியானது தொற்றுநோயை எதிர்த்து போராடுவதுற்கு உதவுமா என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆய்வுகள் தேவை என கூறுகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    சமீரண் பாண்டா ( இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்):-

    2-வது டோசுக்கு பின்னர் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று தடுப்பூசி நிறுவனங்கள் தீர்மானித்தால், அது நோய் எதிர்ப்பு தன்மை பற்றிய தரவுகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.

    அதாவது, 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு நோய் எதிர்ப்பு பொருள் செறிவு நிலை என்ன, எவ்வளவு காலம் கழித்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அது கீழே வந்து, மூன்றாவது டோஸ் தேவைப்படும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    ஏன் இப்படி 3-வது டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று கம்பெனிகள் கூறுகின்றன என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இது தொடர்பாக என்ன தரவுகள் இருக்கின்றன? கொரோனா வந்தது, 2019 டிசம்பர். தடுப்பூசிகள் கடந்த ஏப்ரல், ஆகஸ்டில் வந்தன. எனவே போதுமான தரவுகள் கிடையாது. 3-வது டோஸ் பற்றி ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கக்கூடாது. தரவுகளின் அடிப்படையில்தான் முடிவு எடுக்க வேண்டும்.

    டாக்டர் கிரிதரா ஆர்.பாபு (இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் ஆயுட்கால தொற்றுநோயியல் துறையின் தலைவர்):-

    3-வது டோஸ், கொரோனாவை எதிர்த்து இன்னும் திறம்பட போராட உதவுமா என்பதை பார்க்க வேண்டும். கொரோனாவில் இருந்து எவ்வளவு காலத்துக்கு தடுப்பூசி பாதுகாப்பு தரும் என்பதன் அடிப்படையில் பூஸ்டர் டோஸ் தருவது பற்றி தீர்மானிக்க வேண்டும். பூஸ்டர் டோஸ், கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

    மற்றொரு நிபுணர்:-

    எதிர்காலத்தில் வேண்டுமானால் 3-வது டோஸ் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கலாம். தற்போது அல்ல. 3-வது டோஸ் தடுப்பூசி தேவைக்கான தரவுகள் இல்லை. புளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி போல கொரோனாவுக்கும் ஆண்டு தோறும் தடுப்பூசி தேவைப்படலாம். ஆனால் இப்போதே அதை ஊகிக்க முடியாது. இந்த வைரஸ் புதிதானது. தடுப்பூசி வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. எனவே இன்னும் கூடுதல் தரவுகளும், ஆய்வுகளும் தேவை.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
    Next Story
    ×