search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கும்பமேளா பாதியில் நிறுத்தம்- திரும்பி வரும் சாதுக்களுக்கு கொரோனா பரிசோதனை உத்தரவு

    கும்பமேளாவில் பங்கேற்று விட்டு திரும்புபவர்கள் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று மத்திய பிரதேசம், டெல்லி மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவின் போது ஏராளமான பக்தர்கள் கங்கை ஆற்றில் புனித நீராடுவார்கள்.

    வழக்கமாக கும்பமேளா ஜனவரி மத்தியில் தொடங்கி, ஏப்ரல் இறுதிவரை 100 நாட்களுக்கு மேலாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கும்பமேளாவை கடந்த 1-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை ஒரு மாதம் மட்டுமே நடத்த சாதுக்கள் அமைப்பு முடிவு செய்தன.

    கடந்த 12 மற்றும் 14-ந் தேதிகளில் மட்டும் 43 லட்சத்துக்கும் அதிகமானோர் புனித நீராடினர்.

    இவர்களில் பெரும்பாலானோர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல், சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் நீராடினர். இதனால் கும்பமேளா நடக்கும் இடம் கொரோனா பரவும் இடமாக மாறியது.

    கும்பமேளாவுக்கு வந்த 2.35 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 2,171 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஏராளமான துறவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சாதுக்கள் அமைப்புகள் சம்மதித்தால் கும்பமேளாவை உடனடியாக நிறைவு செய்ய தயாராக இருப்பதாக உத்தரகாண்ட் அரசு அறிவித்தது.

    இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி கும்பமேளாவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    கும்பமேளா

    பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கும்பமேளா பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதை துறவிகள் அமைப்பு அறிவித்துள்ளது. சாதுக்களின் கூட்டமைப்பின் சுவாமி ஆவ்தேஷ்னந்தகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி என்னிடம் பேசினார். அவரது வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவது தான் இப்போது முக்கியமான பணி. இதனால் கும்பமேளாவை உடனடியாக நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கும்பமேளா நடக்கும் பகுதிகளில் பல லட்சம் பேர் தங்கியுள்ளனர். தற்போது கும்பமேளா பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், ஹரித்துவாரில் இருந்து சாதுக்கள் வெளியேற தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் கும்பமேளாவில் இருந்து திரும்பி வரும் சாதுக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய பல்வேறு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.

    கும்பமேளாவில் இருந்து திரும்புபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

    கும்பமேளாவில் பங்கேற்று விட்டு திரும்புபவர்கள் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று மத்திய பிரதேசம், டெல்லி மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×