search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டண வசூலிப்பை தடுக்க தனியார் ஆஸ்பத்திரிகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்கள்

    நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தனியார் ஆஸ்பத்திரிகளை கண்காணிக்க மாநகராட்சி 70 தணிக்கையாளர்களை நியமித்து உள்ளது.
    மும்பை:

    மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தலைநகர் மும்பையிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

    இதையடுத்து மும்பை மாநகராட்சி நகரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 35 தனியார் ஆஸ்பத்திாிகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்களை நியமித்து உள்ளது. இவர்கள் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் நோயாளிகளிடம் சரியான கட்டணத்தை வசூலிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அதிக கட்டணம் குறித்து நோயாளிகள் புகார் அளித்தால் அதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் முறையாக ஒதுக்கப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.

    இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள 80 சதவீத படுக்கைகள் மாநகராட்சி மூலம் தான் நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும். எனவே தனியார் ஆஸ்பத்திரிகள் காலியாக உள்ள படுக்கைகள் குறித்து உடனுக்கு உடன் மாநகராட்சி தகவல் அளிக்க வேண்டும்’’ என்றார்.

    இதேபோல 70 தணிக்கையாளர்களையும் வழிநடத்த 2 சிறப்பு அதிகாரிகளையும் மாநகராட்சி நியமித்து உள்ளது.
    Next Story
    ×