search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியன் ரெயில்வே
    X
    இந்தியன் ரெயில்வே

    கடந்த 2 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளன - பியூஷ் கோயல்

    கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த காலத்திலும் இந்திய ரெயில்வே ஓய்வின்றி உழைத்துள்ளது என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ரெயில் விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளன என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மத்திய ரெயில்வே, வணிக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் அனைத்து ரெயில்வே ஊழியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    கொரோனா காரணமாக உலகமே உறைந்து நின்றபோதும் ரெயில்வே ஊழியர்களாக நீங்கள் ஓய்வின்றி உழைத்தீர்கள். இந்த கடமை உணர்வின் காரணமாக நிலக்கரி, உரம், உணவு தானியங்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை நாடெங்கும் தங்கு தடையின்றி கொண்டு செல்ல முடிந்தது. கொரோனாவுக்கு எதிராக நீங்கள் ஒருங்கிணைந்து போராடியதை இந்த நாடு என்றென்றும் நன்றியுடன் நினைவுகொள்ளும்.

    4,621 உழைப்பாளர் சிறப்பு ரெயில்களின் மூலம் பல்வேறு இடங்களில் சிக்கித்தவித்த 63 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த ரெயில்கள் மூலம் விவசாயிகள் அறுவடை செய்த பொருட்கள் நாடெங்கிலும் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    மத்திய மந்திரி பியூஷ் கோயல்

    எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்தாண்டு 1,233 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டதுடன், கடந்த நிதியாண்டில் 6,015 கி.மீ. ரெயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளதும், பொருளாதார மீட்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது.

    சாதனைகள் என்றும் முறியடிக்கப்படுவதற்கே என்ற சொல்லுக்கு சான்றாக இந்திய ரெயில்வே பணியாற்றி வருகிறது. சரக்கு ரெயில்வேயின் சராசரி வேகம் கிட்டத்தட்ட இருமடங்காக, அதாவது மணிக்கு 44 கி.மீ. வேகம் என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. பயணிகள் ரெயில்களின் நேரந்தவறாமை 96 சதவீதமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் ரெயில் விபத்துகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதுடன், ஒரு பயணி கூட ரெயில் விபத்து காரணமாக உயிரிழக்கவில்லை.

    உங்களது கடமை உணர்ச்சி மற்றும் சிறந்த முயற்சிகளுக்கு நன்றி கூறும் இத்தருணத்தில் இத்தகு கடமை உணர்வு ஈடுபாடு கொண்ட ஊழியர்கள் காரணமாக, நாம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடிப்பதுடன், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி, இந்திய பொருளாதாரம் மேலும் மேம்பட நாம் பெரும் பங்காற்றுவோம் என்பது என் உறுதியாகும் என தெரிவித்தார்.
    Next Story
    ×