search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரம்பீர் சிங், அனில் தேஷ்முக்
    X
    பரம்பீர் சிங், அனில் தேஷ்முக்

    மகாராஷ்டிரா உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணை

    மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி கட்டாயப்படுத்தியது மற்றும் பல்வேறு முறைகேடுகளில் மகாராஷ்டிரா உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும்படி மும்பை ஐகோர்ட்டில் ஊர்க்காவல் படை டி.ஜி.பி. மனு தாக்கல் செய்துள்ளார்.
    மும்பை :

    மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் மீட்கப்பட்ட வழக்கு விசாரணையில் மன்னிக்க முடியாத குற்றத்துக்காக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்படுவதாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறினார். இதையடுத்து பரம்பீர் சிங் தனது போலீஸ் அதிகாரிகளை மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தினார் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு பரபரப்பு கடிதம் அனுப்பினார். இந்த விவகாரம் மராட்டிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற பரம்பீர் சிங், உள்துறை மந்திரி மீது உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மும்பை ஐகோர்ட்டை அணுகும்படி பரம்பீர் சிங்கை அறிவுறுத்தியது.

    இதையடுத்து பரம்பீர் சிங் நேற்று மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த பிப்ரவரியில் எனது போலீஸ் அதிகாரிகள் பலரை மாநில உள்துறை மந்திரி வீட்டுக்கு அழைத்து ஓட்டல், மதுபான விடுதி உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி கட்டாயப்படுத்தினார். இது தொடர்பாக அனில் தேஷ்முக்கின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி ஆதாரங்களை அழிக்கும் முன்பு அவற்றை கைப்பற்றும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

    மேலும் போலீசார் நியமனம், பணியிட மாற்றத்திலும் மந்திரி அனில் தேஷ்முக் முறைகேடுகளில் ஈடுபட்டார். இது தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை சி.பி.ஐ.க்கு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

    இந்த முறைகேடுகளை ராஷ்மி சுக்லா தனது மேல் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினார். இதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    எதிர்காலத்தில் இதுபோன்ற இடமாற்றங்களை தடுக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

    இதுதவிர தாத்ரா நகர் ஹவேலி தொகுதி எம்.பி. மோகன் தேல்கர் எம்.பி. தற்கொலை வழக்கில் பா.ஜனதா தலைவர்களை சிக்க வைக்குமாறு என்னை வற்புறுத்தினார். போலீசாரின் செயல்பாடுகளில் அடிக்கடி குறுக்கிட்டதோடு, அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். அவர் மீது உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உயர் போலீஸ் அதிகாரியான பரம்பீர் சிங் உள்துறை மந்திரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பது  மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×