search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குலாம் நபி ஆசாத், மோடி  (கோப்புப்படம்)
    X
    குலாம் நபி ஆசாத், மோடி (கோப்புப்படம்)

    கடந்த கால வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசும் மோடி - குலாம் நபி ஆசாத் பாராட்டு

    பிரதமர் மோடி கடந்த காலத்தில் டீ விற்றது பற்றி வெளிப்படையாக பேசுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பாராட்டி உள்ளார்.
    ஜம்மு:

    பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கும் இடையே கட்சிக்கு அப்பாற்பட்டு நெருக்கம் உண்டு.

    சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிந்து, நடந்த பிரிவுபசாரத்தின்போது பிரதமர் மோடி அவரை மனம் திறந்து பாராட்டினார். பல நேரங்களில் நெகிழ்ந்தார். அவரது கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் உருண்டோடின. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில், குலாம் நபி ஆசாத் இடத்தில் மற்றொருவர் பொருந்துவது கடினம் என்றும் குறிப்பிட்டார்.

    அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத் தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ளார்.

    அவருடன் அதிருப்தி கோஷ்டியில் உள்ள பிற தலைவர்கள் நேற்று முன்தினம் கூடிப்பேசினார்கள். அந்த கூட்டத்தில்கூட கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும், கட்சி அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர்கள் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்த தருணத்தில் ஜம்முவில் குஜ்ஜார் தேஷ் அறக்கட்டளை நிகழ்ச்சியில் குலாம் நபி ஆசாத் நேற்று கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பிரதமர் மோடியை மனம் திறந்து பாராட்டினார். அவர் கூறியதாவது:-

    நான் கிராமத்தில் இருந்து வந்தவன்தான். நான் ஒரு கிராமவாசி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.

    நமது பிரதமர் மோடி போன்ற தலைவர்களைப் பற்றிய நிறைய விஷயங்களை நான் பாராட்டுகிறேன்.

    எனக்கும் மோடிக்கும் இடையே அரசியலில் மாறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி வெளிப்படையாக, அதுவும் தான் டீ விற்று வந்ததைக்கூட சொல்கிறார். இது பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×