search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெங்களூருவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

    கர்நாடகத்தில் நேற்று புதிதாக 571 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    பெங்களூரு:

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 76 ஆயிரத்து 799 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 50 ஆயிரத்து 207 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நேற்று 642 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 32 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது.

    மாநிலத்தில் நேற்று வைரஸ் தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 320 ஆக உயர்ந்துள்ளது. 121 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5,501 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

    கர்நாடகத்தில் நேற்று அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 368 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாரியில் 10 பேர், தட்சிண கன்னடாவில் 22 பேர், ஹாசனில் 10 பேர், கலபுரகியில் 21 பேர், மைசூருவில் 36 பேர், துமகூருவில் 18 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 3 பேர், ஹாசனில் ஒருவர் என மொத்தம் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

    மற்ற 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை. பாகல்கோட்டை, ராய்ச்சூர் ஆகிய 2 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று மாநிலத்தில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் நேற்று பெலகாவி, பீதர், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர் உள்பட 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது. பெங்களுருவில் சுமார் 200 என்ற அளவில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இது நகர மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×