search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    குவாரி வெடிவிபத்தில் 6 பேர் பலி- கர்நாடக அரசின் அலட்சியமே காரணம் என டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

    சிக்பள்ளாப்பூரில் வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் பலியானதற்கு கர்நாடக அரசின் அலட்சியமே காரணம் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதத்தில் சிவமொக்கா மற்றும் சிக்பள்ளாப்பூரில் நடந்த வெடி விபத்து சம்பவத்தில் தலா 6 பேர் பலியாகி உள்ளனர். சட்டவிரோதமாக வெடிப்பொருட்களை ஏற்றி செல்வது, கல்குவாரிகளை நடத்துவதே இதுபோன்ற வெடி விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாகும். சிவமொக்காவில் நடந்த வெடி விபத்து சம்பவத்தை மறக்கும் முன்பாகவே மீண்டும் ஒரு கோர வெடி விபத்து நடந்து 6 அப்பாவி மக்கள் பலியாகி இருக்கிறார்கள். வெடிப்பொருட்களை எடுத்து செல்வது, அவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள எந்த விதிமுறைகளையும் அரசு பிறப்பிக்கவில்லை.

    உட்கட்சி மோதல் உள்ளிட்ட அரசியலிலேயே கர்நாடக அரசு மூழ்கி உள்ளது. சட்டவிரோத கல்குவாரி மற்றும் வெடிப்பொருட்கள் பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அக்கறை இல்லை. பெயரளவுக்கு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் மந்திரிகள் தெரிவிக்கிறார்கள். இதுவரை சட்டவிரோத கல்குவாரி நடத்துபவர்கள் மீதோ, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்துள்ளவர்கள் மீதோ, சிவமொக்கா வெடி விபத்துக்கு காரணமானவர்கள் மீதோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சிவமொக்காவில் வெடிவிபத்து சம்பவம் நடந்த பின்பு அரசு சுதாரித்து கொண்டு, நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது சிக்பள்ளாப்பூரில் வெடி விபத்து நடந்து 6 பேர் பலியாகி இருக்க மாட்டார்கள். சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறும் அரசு பிரதிநிதிகள் ஜோக்கர் போல் தெரிகிறார்கள். கர்நாடக அரசு மற்றும் அரசு பிரதிநிதிகளின் அலட்சியமே சிக்பள்ளாப்பூரில் வெடி விபத்து நடந்து 6 பேர் பலியாக முக்கிய காரணமாகும்.

    அரசின் அலட்சியம் இன்னும் எத்தனை உயிரை பலியாக்க உள்ளதோ?.. சிக்பள்ளாப்பூரில் நடந்த வெடி விபத்து சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வெடி விபத்து குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது இனியாவது அரசு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×