search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன்
    X
    பேரறிவாளன்

    ஆளுநரின் முடிவு என்னவென்று தெரியவில்லை... பேரறிவாளன் வழக்கு 9ம் தேதி விசாரணை

    உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காத சூழலில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இந்த பரிந்துரை மீது முடிவு எடுக்கவில்லை.

    இதற்கிடையே, பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. 

    இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு முதலில் வாதிட்டது. பின்னர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர்.

    ஆனால், உச்ச நீதிமன்றம் ஆணையட்டு 12 நாட்களாகியும் தமிழக அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆளுநரின் முடிவு என்ன என்றே தெரியாத நிலை உள்ளது. 

    ஆளுநரின் முடிவு தொடர்பாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், பேரறிவாளன் வழக்கை பிப்ரவரி 9ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அப்போது ஆளுநரின் முடிவு குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×