search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளின் துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் உயிரிழப்பு

    சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளின் துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஷ்காரின் காங்கர் மாவட்டம் நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்கு பணியாற்றி வந்த மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த போலீஸ்காரரான சுக்லுராம் தக்கா நேற்று மாலையில் சலியபாரா கிராமத்தில் உள்ள சந்தைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த நக்சலைட்டு குழு ஒன்று, போலீஸ்காரர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஒடியது.

    இந்த சம்பவத்தில் தக்கா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நக்சலைட்டுகளின் இந்த துப்பாக்கி சூட்டில் உள்ளூர்வாசி ஒருவர் தோளில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்துக்கு உட்பட்ட குச்சாகுடா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் நுழைந்த மாவோயிஸ்டு கும்பல் ஒன்று, அங்குள்ள பஞ்சாயத்து தலைவரான திரவுபதி பத்ராவின் வீட்டுக்குள் புகுந்து அவரது மகனை கடத்திச்சென்றது.

    பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று கிராமத்துக்கு அருகே வீசிச்சென்றது. இதைப்போல அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொருவரையும் சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றது.

    இவர்கள் இருவரும் போலீசாருக்கு உளவு தெரிவிப்பவர்கள் என நினைத்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிகிறது. இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×