search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: மந்திரி சுதாகர் தகவல்

    கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 17-ந் தேதி நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதால், போலியோ சொட்டு மருந்து வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந் தேதி (நாளை) நடக்கிறது. இதில் கர்நாடகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 64 லட்சத்து 7 ஆயிரத்து 930 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா தனது அலுவலக இல்லத்தில் தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளும், இப்போது போலியோ சொட்டு மருந்தை பெற வேண்டும். இந்த சொட்டு மருந்தால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவது இல்லை. கர்நாடகத்தில் 11 ஆண்டுகளாக புதிதாக போலியோ பாதிப்புகள் ஏற்படவில்லை.

    போலியோ இல்லாத நாடாக இந்தியா ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். 85 லட்சத்து 5 ஆயிரத்து 60 டோஸ் சொட்டு மருந்துகள் தயாராக உள்ளன. இந்த பணியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 179 மருத்துவ ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

    6, 645 மேற்பார்வையாளர்கள், 904 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 32 ஆயிரத்து 908 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் தவறான தகவல்களை மக்கள் நம்பக்கூடாது. சிலருக்கு லேசான பக்க விளைவுகள் இருந்தன. ஆனால் அதுவும் சரியாகிவிட்டது.

    இந்த தடுப்பூசியை நாம் பயன்படுத்தாவிட்டால், நமக்கு மிகப்பெரிய இழப்பு. கர்நாடகத்தில் பள்ளிகளை திறக்க அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வித்துறை இணைந்து இந்த விஷயத்தில் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.
    Next Story
    ×