search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி பேரணி
    X
    டெல்லி பேரணி

    டெல்லி பேரணி : விவசாயிகள் தாக்கியதில் 83 போலீசார் காயம் - வீடியோ வெளியீடு

    டெல்லி பேரணியில் விவசாயிகள் தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளதாக டெல்லி போலீசார் வீடியோ மூலம் தெரிவித்து உள்ளனர்.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

    இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்று கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்து கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர். டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர்.

    டெல்லி பேரணி


    ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.

    இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.  போலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன.

    எனினும், விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.    விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.  இதனால், அந்த பகுதியில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

    டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னிட்டு சில பகுதிகளில் இன்டர்நெட் சேவையை முடக்கி மத்திய உள்விவகார அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதன்படி இன்றிரவு 11.59 மணிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

    டெல்லி பேரணியில் போலீசாரின் அனுமதி அளித்த பாதையை மீறி சிலர் தடுப்புகளை உடைத்து கொண்டு சென்றுள்ளனர்.  இதனால் அவர்களை தடுக்க முயன்ற 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது என முதற்கட்ட தகவல் வெளியானது.  இந்நிலையில், டெல்லி டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளன என சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் தெரிவித்து உள்ளது.

    இந்நிலையில், டெல்லி போலீசார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெல்லியில் விவசாயிகள் இன்று நடத்திய டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.  காயமடைந்த போலீசார் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

    இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், போலீசாரின் மீது கம்புகள் மற்றும் பிற பொருட்களை கொண்டு விவசாயிகள் தரப்பில் இருந்து தாக்கும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.  அவர்களிடம் இருந்து போலீசார் தப்பிப்பதற்காக ஓடும் காட்சிகளும் உள்ளன.

    இதேபோன்று டெல்லி போலீசார் (கிழக்கு சரகம்) கூறும்பொழுது, டெல்லியில் விவசாயிகளின் இன்றைய டிராக்டர் பேரணியில் கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என கூறி உள்ளனர்
    Next Story
    ×