search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட போலீசார்
    X
    பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட போலீசார்

    டெல்லி பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவல் - விவசாய சங்கம் தகவல்

    டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளனர் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

    இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்று கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்து கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர். டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர்.

    ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர்.

    தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

    இதைத்தொடர்ந்து போலீசார் தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.

    இதற்கிடையே, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.  போலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. விவசாயிகள் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்தனர். விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லி டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளன என விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், விவசாயிகளின் குடியரசு தின அணிவகுப்பில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டதற்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இன்றைய பேரணியில் விரும்பத்தகாத மற்றும் ஏற்று கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்ததற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்து கொள்கிறோம்.  இதுபோன்ற செயல்களில் விவசாயிகள் ஈடுபடவில்லை.

    அமைதியாக பேரணியை நடத்திச் செல்ல அனைத்து வித முயற்சிகள் எடுத்தபோதிலும், சில அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி சென்றுள்ளனர். அவர்கள் கண்டனத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சில சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர்.

    இதனை தவிர்த்து, இது அமைதியாக நடந்த பேரணியாகும். அமைதியே எப்பொழுதும் நம்முடைய பெரிய பலம்.  எந்தவித வன்முறையும் நமது இயக்கத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×