search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும் -மோடி

    முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், இந்த தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார். அதன்பின்னர் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது. 

    ஒத்திகைக்கு பிறகு இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பிரதமர் மோடி இந்த பணியை காணொளி வாயிலாக துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மனித குலம் ஒன்றை நினைத்துவிட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல. இந்தியாவில் குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசி அல்ல, இரண்டு இந்திய தயாரிப்பு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 தடுப்பூசிகள் குறைவான காலக்கட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகளும் மற்ற நாடுகளை விட விலை மலிவானவை.

    சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது. தடுப்பூசியை கண்டுபிடிக்க பாடுபட்ட விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள்.

    நாட்டு மக்களின் நலனுக்கு உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி போடப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த 2-3 மாதங்களில் இந்தியாவில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். முதல் தடுப்பூசிக்கு பின் அடுத்த தடுப்பூசி எப்போது என்பது குறித்து தொலைபேசிக்கு தகவல் வரும்

    முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், 2வது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும்.

    தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் முகக்கவசம் அணியாமல் இருக்க கூடாது. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×