search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகவுடா எடியூரப்பா
    X
    தேவகவுடா எடியூரப்பா

    பாஜகவுடன் தேவகவுடா கட்சி இணைப்பா?: எடியூரப்பா விளக்கம்

    பாஜகவுடன் தேவகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி இணைக்கப்படுவதாக வெளியான தகவலால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தை பொறுத்தவரையில் தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு செல்வாக்குடன் உள்ளன.

    அதற்கு அடுத்தப்படியாக ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. இந்த கட்சியின் தேசிய தலைவராக முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா இருந்து வருகிறார்.

    கர்நாடகத்தில் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இன்னும் சில கட்சிகள் இருந்தாலும் அவற்றுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. சமீபகாலமாக பா.ஜனதாவுடன், ஜனதா தளம்(எஸ்) கட்சி நெருக்கம் காட்டி வருகிறது. கர்நாடக மேல்-சபையில் பெரும்பான்மை இல்லாத பா.ஜனதாவுக்கு அக்கட்சி ஆதரவாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கர்நாடக மேல்-சபையில் வேளாண்மை சந்தைகள் சட்டம் நிறைவேற ஜனதா தளம்(எஸ்) ஆதரவு வழங்கியது. மேலும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரான குமாரசாமி பா.ஜனதா தலைவர்களை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறார். அதே வேளையில் காங்கிரஸ் தலைவர்களை அவர் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

    அவ்வப்போது எடியூரப்பாவை குமாரசாமி நேரில் சந்தித்து பேசுகிறார். இதற்கிடையே சமீபத்தில் பிறந்த நாளையொட்டி குமாரசாமிக்கு பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபோன்ற விஷயங்கள் பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) இணைப்பு குறித்து வெளியாகும் தகவலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி, பா.ஜனதாவுடன் இணையும் என்று கர்நாடக பா.ஜனதா துணைத் தலைவர் அரவிந்த் லிம்பாவளி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நாட்டில் மோடி அலை வீசுகிறது. இதனால் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக உருவாகி இருக்கிறது. எங்கள் கட்சி பலமாக இருப்பதால் பலர் பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள். வரும் நாட்களில் கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளது.

    ஒரு கட்சி (ஜனதா தளம்(எஸ்)), பா.ஜனதாவில் இணைய உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி படித்தேன். அது நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் வரும் காலத்தில் மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றம் நிகழக்கூடிய நிலை உள்ளது. நாங்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அரவிந்த் லிம்பாவளி கூறினார்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஜி.டி.தேவகவுடா மைசூருவில் நேற்று, “பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியை இணைக்க தேவேகவுடா உயிருடன் இருக்கும் வரை அனுமதிக்க மாட்டார். 2 தேசிய கட்சிகளுக்கு மத்தியில் தேவேகவுடா மாநில கட்சியை கஷ்டப்பட்டு கட்டமைத்துள்ளார். பா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டுமானால் அமைக்கப்படலாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்“ என்றார்.

    அக்கட்சியை சேர்ந்த இன்னொரு எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சீனிவாஸ் துமகூருவில் நேற்று நிருபர்களிடம், “பா.ஜனதாவை எதிர்த்தே ஜனதா தளம்(எஸ்) அரசியல் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியை இணைத்தால், அதை நான் ஏற்கமாட்டேன். ஜனதா தளம்(எஸ்) கட்சியை விட்டு விலகி விடுவேன்“ என்றார்.

    இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் திடீரென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை முதல்-மந்திரி எடியூரப்பா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மேல்-சபை தலைவர் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கியுள்ளது. ஆனால் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் எங்கள் கட்சியில் சேரவில்லை. பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி இணைக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் தவறானது. அத்தகைய சூழ்நிலை எழவில்லை. மேல்-சபை தலைவர் விஷயத்தில் மட்டுமே குமாரசாமி எங்களுக்கு ஆதரவு வழங்குகிறார். இதை தவிர வேறு எந்த விஷயமும் இரு கட்சிகளிடையே இல்லை.

    பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு தங்களின் ஆதரவு இல்லை என்று குமாரசாமி தெளிவாக கூறியுள்ளார். நாங்கள் அவசர சட்டம் மூலம் பசுவதை தடையை அமலுக்கு கொண்டு வருகிறோம். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. இதற்கிடையே வரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×