search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெஜ்ரிவால் மற்றும் அவரது வீடு
    X
    கெஜ்ரிவால் மற்றும் அவரது வீடு

    டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் போலீசாரால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார் - ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

    விவசாயிகளை சந்தித்து ஆதரவு கொடுத்தது முதல் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போலீசாரால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து 13-வது நாளாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், டெல்லியின் சிங்கு எல்லையில் போராடிவரும் விவசாயிகளை நேற்று டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். மேலும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு ஆதரவு அளிக்கும் எனவும் உறுதியளித்தார்.

    இந்நிலையில், சிங்கு எல்லையில் விவசாயிகளை சந்தித்த பின்னர் வீடு திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முதல் டெல்லி போலீசாரால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முதல் அவரது வீட்டை விட்டு வெளியே செல்ல டெல்லி போலீசார் அனுமதிக்கவில்லை என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இந்த சம்பத்தால் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தீவிரமடைந்ததையடுத்து விளக்கம் கொடுத்துள்ள டெல்லி போலீஸ் அதிகாரி சதீஷ், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. முதல்மந்திரி வீட்டை விட்டு வெளியே செல்ல எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. முதல்மந்திரி தனது வழக்கமான சந்திப்புகளில் ஈடுபடலாம். அவர் தனது வீட்டை விட்டு வெளியேவும் செல்லலாம்.

    அமைதியை நிலைநாட்டும் வகையில் தேவையான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி தெற்கு பகுதி டிசிபி அல்போன்ஸ் கூறுகையில், முதல்மந்திரியின் பாதுகாப்பிற்காக வழக்கமான எண்ணிக்கையிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி முதல்மந்திரியால் அனுமதிக்கப்பட்ட நபர்கள் அவரது இல்லத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

    டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவரது வீட்டிலேயே காவலில் வைக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட தகவலால் டெல்லி அரசியல் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    டெல்லி போலீஸ் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×