search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு அடைப்பு
    X
    முழு அடைப்பு

    மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க எதிர்ப்பு: கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பு

    மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறக்கோரி கர்நாடகத்தில் நாளை (சனிக்கிழமை) முழு அடைப்பு நடக்கிறது. இதற்கு ஆதரவு வழங்குமாறு கன்னட சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி எடியூரப்பா, மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார். பெலகாவி விஷயத்தில் கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், மராட்டிய சமூக மக்களின் வளர்ச்சிக்கு முதல்-மந்திரி அறிவித்துள்ள இந்த திட்டத்தை கன்னட சங்கங்கள் கடுமையாக கண்டித்து வருகின்றன. இந்த முடிவை வாபஸ் பெறக்கோரி வருகிற 5-ந் தேதி (நாளை) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது.

    இதுகுறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வாட்டாள் நாகராஜ் உள்பட அந்த சங்கங்களின் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தபடி முழு அடைப்பு போராட்டம் கர்நாடகத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கவில்லை. முழு அடைப்பை ஆளும் பா.ஜனதா கடுமையாக எதிர்த்து வருகிறது.

    கர்நாடகத்தில் மராட்டிய மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருவதாவும், அவர்களின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை கன்னட சங்கங்கள் எதிர்ப்பது சரியல்ல என்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கூறியுள்ளனர். முழு அடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் முழு அடைப்பு குறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக அரசு, மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறக்கோரி நாங்கள் திட்டமிட்டப்படி 5-ந் தேதி(நாளை) முழு அடைப்பு நடத்துகிறோம். கன்னட மக்களின் உரிமையை நிலைநாட்டவே நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இதற்கு ஒட்டுமொத்த மாநில மக்களும் ஆதரவு வழங்க வேண்டும். அரசின் மிரட்டலுக்கு நாங்கள் பணியமாட்டோம். எங்களின் இந்த முழு அடைப்புக்கு 1,600-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. கன்னடர்களின் சுயமரியாதையை காக்க வேண்டும். கன்னட போராட்டக்காரர்களை இந்த அரசு அவமானப்படுத்துகிறது.

    இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். முழு அடைப்பு தினத்தன்று நாங்கள் பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பஸ் போக்குவரத்து ஊழியர்களின் ஆதரவை நாங்கள் கேட்டுள்ளோம். ஆட்டோ- வாடகை கார் டிரைவர்கள் சங்கங்களின் ஆதரவையும் கேட்டு இருக்கிறோம். கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பு எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

    இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

    பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், முழு அடைப்புக்கு அனுமதி கிடையாது என்றும், இந்த போராட்டத்தின்போது பொதுச் சொத்துகளை காக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×