search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண நிச்சயதார்த்தத்தின்போது மெகபூப்புடன், காஜாபி எடுத்துக்கொண்ட படம்.
    X
    திருமண நிச்சயதார்த்தத்தின்போது மெகபூப்புடன், காஜாபி எடுத்துக்கொண்ட படம்.

    வருங்கால கணவரை காதலனுடன் சேர்ந்து கொன்ற இளம்பெண்

    ராய்ச்சூரில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருங்கால கணவரை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
    ராய்ச்சூர்:

    ராய்ச்சூர் மாவட்டம் சிரவாடா டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மெகபூப்(வயது 30). வியாபாரி. இவருக்கும், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா ரோடாலம்பாடா கிராமத்தைச் சேர்ந்த காஜாபி(25) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து மெகபூப் தனது வருங்கால மனைவி காஜாபியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இவர்களது திருமணம் நாளை(வியாழக்கிழமை) நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெகபூப் மாயமானார். அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்று தெரியாமல் இருந்தது. இதற்கிடையே காஜாபியும், அதே கிராமத்தைச் சேர்ந்த சபீர் என்ற வாலிபரும் மாயமானார்கள்.

    இதனால் சந்தேகம் அடைந்த இருகுடும்பத்தினரும் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். முதல்கட்டமாக சிரவாடா போலீசில் மெகபூப் மாயமானதாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, மாயமான மெகபூப் படுகொலை செய்யப்பட்டதும், அவரது உடல் விவசாய தோட்டத்தில் புதைக்கப்பட்டதும் தெரியவந்தது.

    அதாவது, மெகபூப்பின் வருங்கால மனைவியான காஜாபி, அதே கிராமத்தைச் சேர்ந்த சபீரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு காஜாபியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், மெகபூப்புக்கும், காஜாபிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்தனர்.

    இதனால் கோபமடைந்த காஜாபி, தனது வருங்கால கணவரை, தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட திட்டமிட்டார். அதன்பின்னர் எப்படியும் தன்னை, தனது காதலனுடன் குடும்பத்தினர் சேர்த்து வைத்து விடுவார்கள் என்று எண்ணினார். இதுபற்றி அவர் தனது காதலன் சபீரிடமும் கூறினார். அதன்பேரில் இந்த கொலை திட்டத்திற்கு சபீரும் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து சபீர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து சம்பவத்தன்று மெகபூப்பை ஒரு சரக்கு ஆட்டோவில் கடத்திச் சென்றார். பின்னர் அவர்கள் ஒரு விவசாய தோட்டத்தில் வைத்து மெகபூப்பை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்து உடலை புதைத்துவிட்டனர். அதையடுத்து சபீரும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    அதன்பின்னர் ஒரு நாள் கழித்து காஜாபி வீட்டைவிட்டு வெளியேறி, தனது காதலன் சபீருடன் ஓடிவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த காஜாபியையும், அவரது காதலன் சபீரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சபீரின் நண்பர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றும் அறியாத அப்பாவியான வருங்கால கணவரை இளம்பெண் தனது காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×