search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
    X
    முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான்

    மத்திய பிரதேசம் இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை - ஆட்சியை தக்கவைக்குமா பாஜக?

    மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படுகிறது.
    போபால்:

    230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி தூக்கினார்.

    அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியில் இருந்து விலகினர். இதையடுத்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார். அவர்களை தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

    இதனால்,  மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்ந்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சியை கைப்பற்றியது.

    இதன் விளைவாக ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களைச் சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 3ம் தேதி நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடியில் செலுத்தினர்.

    மத்திய பிரதேசத்தில் தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. இன்னும் 9 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியதுள்ளது. 

    அதேபோல், 88 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பெற போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் அல்லது குறைந்தது 21 தொகுதிகளில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கலாம்.

    பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படுகின்றன.

    இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 9 இடங்களில் வெற்றி பெற்றால்தான் மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகானின் பா.ஜ.க. ஆட்சி தொடரும். எனவே பீகார் தேர்தலை போலவே மத்திய பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளும் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேச இடைத்தேர்தலையும் சேர்த்து நாடு முழுவதும் இன்று 56 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
    Next Story
    ×