search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி
    X
    ஜிஎஸ்டி

    அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல்

    இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறி, ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது அரசுக்கு மாத வருவாய் சராசரியாக ரூ.98 ஆயிரத்து 114 கோடியாக இருந்தது. பின்னர், கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வரி வருவாயும் மெல்ல மெல்ல அதிகரித்தபடி இருந்தது. 
     
    கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழில்துறை முடங்கியதால் மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் குறையத் தொடங்கியது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், வரி வருவாயும் சற்று உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அக்டோபர் மாதத்தில் 1,05,155 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், அக்டோபர் முதல் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை மொத்தம் 80 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர் என நிதித்துறை தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×