
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி வரும் வரை முக கவசம் தான் கொரோனா தடுப்பு மருந்தாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் மும்பையில் முககவசம் அணியாதவர்களை சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி உதவி கமிஷனர் விஸ்வாஸ் மோதே கூறுகையில், “ முககவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலித்து வருகிறோம். இதில் அபராதம் செலுத்த மறுப்பவர்கள் மற்றும் ஊழியர்களிடம் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களை சாலையை சுத்தம் செய்தல் போன்ற சமூக பணிகளில் ஈடுபட வைக்கிறோம்.
கே-வார்டு பகுதியில் இதுவரை 35 பேரை சமூக பணிகளில் ஈடுபட வைத்து உள்ளோம் “ என்றார்.