search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி துர்கா பூஜையை கொண்டாடுங்கள் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்

    கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி துர்கா பூஜையை கொண்டாடுங்கள் என்று மேற்கு வங்காள மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் 5 நாள் கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, கொல்கத்தாவில், கிழக்கு மண்டல கலாசார மையம் ஏற்பாடு செய்த துர்கா பூஜை கொண்டாட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    பின்னர், அங்கு கூடியிருந்த மக்களிடையே காணொலி காட்சி மூலம் பேசினார். முதலில், வங்காள மொழியில் சில வார்த்தைகள் பேசினார். அவர் பேசியதாவது:-

    இந்த ஆண்டு துர்கா பூஜை, கொரோனா காரணமாக, குறைந்த அளவிலேயே கொண்டாடப்படுகிறது. ஆனாலும் உற்சாகத்துக்கு குறைவே இல்லை.

    கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி துர்கா பூஜையை கொண்டாட வேண்டும். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.

    சக்தியின் வடிவமாக துர்கா வழிபடப்படுகிறார். அத்தகைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கற்பழிப்பு குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும்வகையில் சட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் உஷாராக இருக்கிறோம்.

    இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் துர்கா பூஜை பிரதிபலிக்கிறது. வங்காளத்தின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் உணர்த்துகிறது.

    சுதந்திர போராட்டத்தில் மேற்கு வங்காள மக்களின் பங்களிப்பு அதிகம். அதுபோல், இங்கு தோன்றிய தலைவர்களும், சீர்திருத்தவாதிகளும் நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றி உள்ளனர்.

    ‘தற்சார்பு இந்தியா’ என்ற இலக்கை அடைவதில், இந்தியாவுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் திறன், மேற்கு வங்காளத்துக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேற்கு வங்காளத்தில் 10 பந்தல்களில் துர்கா பூஜை கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அவரது காணொலி உரை, மாநிலம் முழுவதும் 294 சட்டசபை தொகுதிகளிலும் 78 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு உள் அடங்கிய அனைத்து பகுதிகளிலும் நேரடியாக ஒளிரப்பு செய்யப்பட்டது.
    Next Story
    ×