search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்
    X
    வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்

    1.5 கிமீ தூரம் நீண்ட வரிசை... உலக பிரியாணி தினத்தில் பிரியாணி வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள்

    உலக பிரியாணி தினத்தையொட்டி, கர்நாடகா மாநிலம் ஹோஸ்கோட்டில் உள்ள ஓட்டலில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரியாணி பிரியர்கள் வரிசையில் காத்திருந்து வாங்கினர்.
    பெங்களூரு:

    பெங்களூரு அருகில் உள்ள ஹோஸ்கேட் நகரில் உள்ள ஆனந்த் தம் பிரியாணி கடை மிகவும் பிரபலம். அந்த கடையில் தயாரிக்கப்படும் பிரியாணி அப்பகுதி வட்டாரத்தில் மிகவும் சுவையானது என்பதால் பெரும் கூட்டம் கூடும். மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். அதிகாலையில் தொடங்கும் பிரியாணி விற்பனை சில மணி நேரங்களில் முடிவடைந்துவிடும். 

    இன்று வார விடுமுறை நாள் என்பதாலும், உலக பிரியாணி தினம் என்பதாலும் பிரியாணி வாங்குவதற்காக அதிகாலை முதலே இந்தக் கடை முன் மக்கள் கூடத் தொடங்கிவிட்டனர். மக்கள் முகக்கவசத்துடன் பிரியாணி வாங்குவதற்காக நிற்கத் தொடங்கினர்.  நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால் சுமார் 1.5 கிமீ தொலைவிற்கு வரிசை நீண்டது. 

    இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், ‘22 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறோம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி செய்து விற்பனை செய்கிறோம். வார இறுதி நாட்களில், விடுமுறைகளில் இது இன்னும் அதிகரிக்கும். எங்கள் கடையில் செயற்கையான பொருட்கள், சுவைக்கு ரசாயனப் பொருட்கள் சேர்க்காமல் பிரியாணி செய்வதால் மக்கள் விரும்புகிறார்கள்’ என்றார்.


    இன்று அதிகாலை முதல் மக்கள் பிரியாணி வாங்குவதற்காக 1.5 கி.மீ. தொலைவுக்கும் நீளமான வரிசையில் நின்றிருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையதளவாசிகள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். குறிப்பாக கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்று பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×