search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி - சீன அதிபர்
    X
    பிரதமர் மோடி - சீன அதிபர்

    பிரதமர் மோடி - சீன அதிபர் அடுத்த மாதம் சந்திப்பு

    லடாக் பதற்றத்துக்கு மத்தியில் அடுத்த மாதம் (நவம்பர்) பிரதமர் மோடியும், சீன அதிபரும் நேருக்குநேர் சந்திக்கிறார்கள். பிரிக்ஸ் மாநாட்டின்போது இந்த சந்திப்பு நடக்கிறது.
    புதுடெல்லி:

    லடாக்கின் கிழக்கே இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த பதற்றத்தை தணிக்க இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது.

    அந்தவகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 6 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன. இதைப்போல இருநாட்டு வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் மாஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் எல்லையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இன்னும் ஏற்படவில்லை.

    சீனாவின் அத்துமீறல் மனப்பான்மையை அது தொடர்ந்து வருவதால், இந்தியாவும் படைகளை குவித்து எத்தகைய மோதலுக்கும் தயார் நிலையில் இருக்கிறது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது.

    இந்தநிலையில் இந்தியா, சீனா, ரஷியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் 12-வது உச்சி மாநாடு அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி நடக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் மெய்நிகர் முறையில் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கிழக்கு லடாக்கில் இருநாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் முதல் முறையாக நிகழும் இந்த சந்திப்பின்போது, இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்களா? என்பது குறித்து இன்னும் தகவல் இல்லை.

    ‘உலகளாவிய ஸ்திரத்தன்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சிக்கான பிரிக்ஸ் ஒத்துழைப்பு’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். பிரிக்ஸ் அமைப்பின் முக்கியமான3 தூண்களான அமைதியும்- பாதுகாப்பும், பொருளாதாரமும்-நிதியும், கலாசாரமும்- மக்களுக்கு இடையேயான உறவுகளும் என்ற துறைகளில் 5 உறுப்பு நாடுகளும் இந்த ஆண்டு உறவுகளை தொடர்ந்ததாக பிரிக்ஸ் அமைப்பு கூறியுள்ளது.

    இதுகுறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆலோசகர் ஆன்டன் கோப்யகோவ் மேலும் கூறுகையில், ‘கொரோனா தொற்றால் சர்வதேச சூழல் கடினமாக இருந்தபோதும், பிரிக்ஸ் அமைப்பின் கீழ் நடைபெற்று வரும் முயற்சிகள் அனைத்தும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்தவகை யில் ஜனவரி முதல் 60-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×