search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்காவின் குர்தாவை பிடித்த காவலர்
    X
    பிரியங்காவின் குர்தாவை பிடித்த காவலர்

    பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்த ஆண் காவலர்... யோகி ஆதித்யநாத் அரசு மீது சஞ்சய் ராவத் பாய்ச்சல்

    ஹத்ராஸ் நோக்கி சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது பிரியங்கா காந்தியின் குர்தாவை ஆண் காவலர் பிடித்து தடுத்து நிறுத்தியதை சிவசேனா எம்பி கண்டித்துள்ளார்.
    மும்பை:

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் ஹத்ராஸ் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. 

    போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. உயிரிழந்த பெண்ணின் கிராமத்தை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. 

    உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி சென்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை போலீசார் திருப்பி அனுப்பினர். ராகுல் காந்தியை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளினர். பிரியங்கா காந்தியையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.  காவல்துறையின் இந்த செயலைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

    அதன்பின்னர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று மீண்டும் ஹத்ராஸ் சென்றனர். அவர்களுடன் காங்கிரஸ் எம்பிக்களும் ஹத்ராஸ் நோக்கி புறப்பட்டனர். அவர்களை டெல்லி-நொய்டா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

    சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், ராகுல் காந்தி மற்றும் 4 நிர்வாகிகள் மட்டும் ஹத்ராஸ் செல்ல நொய்டா போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், தங்களுடன் வந்த அனைத்து நிர்வாகிகளையும் ஹத்ராஸ் நோக்கி செல்ல அனுமதிக்கும்படி ராகுல், பிரியங்கா போராட்டம் நடத்தினர். போலீசாருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னேறாமல் போலீசார் தடுத்தனர். 

    அதன்பின்னர் போலீசாரின் அனுமதி அளித்தபடி ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேர், ஹத்ராஸ் சென்று பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.


    இந்நிலையில், டெல்லி-நொய்டா எல்லையில் நடந்த களேபரத்தின்போது, ஆண் காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து தடுத்து நிறுத்தியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. 

    இந்த புகைப்படத்தை சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் டுவிட்டரில் வெளியிட்டு, உ.பி. அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண் போலீஸ் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×