search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் நடந்த போராட்டம்
    X
    உ.பி.யில் நடந்த போராட்டம்

    ஹத்ராஸ் வன்கொடுமை... வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

    ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமானால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

    இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்களும் நடைபெறுகின்றன.

    கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் உடல் நேற்று அதிகாலை தகனம் செய்யப்பட்டது. போலீசாரின் நெருக்கடியால், வலுக்கட்டாயமாக நள்ளிரவில் உடல் தகனம் செய்யப்பட்டதாக பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இதனை மறுத்துள்ள காவல்துறை, பெற்றோரின் சம்மதத்துடன் உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து உ.பி. அரசை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கி உள்ளனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக பெண்ணின் உடலை அவசரம் அவசரமாக தகனம் செய்திருப்பதாக குற்றம்சாட்டியதுடன், முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த வழக்கு நேர்மையாக நடக்க வேண்டுமானால், வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கூறி உள்ளனர். 

    இந்த சம்பவத்தால் நாட்டு மக்கள் கோபத்தில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார். ‘ஹத்ராசின் நிர்பயா’ உயரிழக்கவில்லை, உணர்வற்ற அரசாங்கம் மற்றும் அதன் நிர்வாகத்தால் கொல்லப்பட்டுள்ளார் என்றும் சோனியா காந்தி கூறி உள்ளார்.

    உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான  ராகுல் காந்தியும், மாநில பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

    போராட்டத்தை போலீசார் தடை செய்வதாக தலித் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
    Next Story
    ×