search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெகபூபா முப்தி, இல்டிஜா
    X
    மெகபூபா முப்தி, இல்டிஜா

    மெகபூபா முப்தி வீட்டுக்காவலுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து வீட்டுக்காவலில் இருக்கும் மெகபூபா முப்தியை விடுதலை செய்ய வேண்டும் என அவரது மகள் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி பிரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அந்த மாநில முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

    இதில் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முக்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர்.

    காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள கிளை சிறையில் காவலில் வைக்கப்பட்டு இருந்த மெகபூபா முப்தி, பேர்வியூ குப்கர் சாலையில் இருக்கும் அவருடைய அலுவலக இல்லத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

    மெகபூபா முப்தியின் வீட்டுக் காவல் கடந்த ஆகஸ்டு 5-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

    ஒரு வருடத்திற்கு மேல் வீட்டுக்காவலில் இருக்கும் மெகபூபா முப்தியை விடுதலை செய்ய வேண்டும் என அவரது மகள் இல்டிஜா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் அளிக்கும் பதிலை வைத்துதான் உச்சநீதிமன்றம் முடிவு செய்யும்.

    பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்த பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×