search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    நிதி பற்றாக்குறையை 5 சதவீதமாக உயர்த்தக்கூடாது: சித்தராமையா வலியுறுத்தல்

    கூடுதலாக ரூ.36,000 கோடி கடன் பெற எதிர்ப்பு தெரிவித்தும், நிதி பற்றாக்குறையை 5 சதவீதமாக உயர்த்தக்கூடாது என்றும் சட்டசபையில் சித்தராமையா வலியுறுத்தினார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் 5-ம் நாள் கூட்டம் பெங்களூருவில் நேற்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு, நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. அதாவது இந்த சட்டத்தின்படி அரசின் நிதி பற்றாக்குறையை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்திக்கொள்ளலாம். இதன் மூலம் மாநில அரசு கூடுதலாக ரூ.36 ஆயிரம் கோடி கடன் பெற அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

    மாநில அரசுகளின் கடன் உரிய கட்டுப்பாடு இன்றி சென்று கொண்டிருந்தது. சில மாநிலங்களில் மொத்த மாநில உற்பத்தியில் 25 சதவீதத்திற்கும் மேல் கடன் வாங்கியது. இதனால் நிதி பற்றாக்குறை 7 சதவீதத்திற்கு மேல் வரை சென்றது. அதனால் மத்திய அரசு நிதி பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டுவந்தது. அதன் அடிப்படையில் கர்நாடக நிதி ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

    அதன்படி மாநில அரசின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. நிதி நிலையை, சரியான முறையில் நிர்வகிப்பதில் கர்நாடகம் இந்திய அளவில் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோதும் சரி, நிதி மந்திரியாக இருந்தபோதும் சரி, நிதி பற்றாக்குறையை அந்த வரையறைக்கு உள்ளேயே வைத்திருந்தேன்.

    இந்த நிலையில் தற்போது கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கூடுதலாக கடன் பெற வசதியாக நிதி பற்றாக்குறையை 5 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மாநில அரசு நிதி பற்றாக்குறையை 5 சதவீதத்திற்கு உயர்த்த நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. ஜி.எஸ்.டி. மூலம் கர்நாடகத்திற்கு வர வேண்டிய இழப்பீட்டுத்தொகையை மத்திய அரசிடம் இருந்து இந்த அரசு கேட்டு பெற வேண்டும்.

    நிதி பற்றாக்குறையை 5 சதவீதத்திற்கு அதிகரித்தால், மாநிலத்தின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும். கூடுதலாக ரூ.36 ஆயிரம் கோடி கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் மீது மேலும் கடன் சுமையை சுமத்துவது சரியல்ல. இவ்வளவு தொகையை கடன் பெறக்கூடாது. அதற்கு பதிலாக நமக்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசிடம் கேட்டு பெறுங்கள். மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் கூட, நிதி பற்றாக்குறையை 3 சதவீதத்தில் 3.5 சதவீதம் வரை மட்டுமே உயர்த்த வேண்டும். அதற்கு மேல் உயர்த்தினால் அது சரியாக இருக்காது.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.

    அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ண பைரேகவுடா பேசும்போது கூறியதாவது:-

    நிதி நிலையை நிர்வகிப்பதில் கர்நாடகம் இந்தியாவிலேயே சிறப்பான மாநிலமாக இருந்து வருகிறது. கர்நாடகத்தில் ஆண்டு சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 முதல் 15 சதவீதம் வரை இருக்கிறது. ஆண்டு சராசரி வருவாய் அதிகரிப்பு 12 சதவீதமாக உள்ளது. நிதி ஒழுங்குமுறை இன்று மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் கடன், வட்டி, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அரசை நடத்த தேவைப்படும் செலவுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.10 லட்சம் கோடி தேவைப்படுகிறது. மொத்த பட்ஜெட்டில் இது 50 சதவீதம் ஆகும்.

    இன்னும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி எங்கே?. இந்த நிலையில், கூடுதலாக ரூ.36 ஆயிரம் கோடி கடன் பெற நிதி பற்றாக்குறையை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த மாநில அரசு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. கூடுதலாக இந்த அளவுக்கு கடன் வாங்கினால் அதில் இருந்து மீள குறைந்தது 7 ஆண்டுகள் ஆகும். நமது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.18 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் நடப்பண்டில் இந்த அளவு குறையும்.

    ஜி.எஸ்.டி. மூலம் வருவாய் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்டுவதாக மத்திய அரசு உறுதியளித்தது. இப்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது. ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு மேல் வரி மூலம் அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. அதாவது சுமார் ரூ.7 லட்சம் கோடி அந்த கவுன்சிலில் இருக்கும். அதன் அடிப்படையில் மத்திய அரசே கடன் வாங்கி மாநிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்க வேண்டும். இதை 11 மாநிலங்கள் வலியுறுத்தி கேட்டுள்ளன. ஆனால் கர்நாடகம் மட்டும் இதுபற்றி பேசவில்லை. கடன் பெற சம்மதிப்பதாக கூறியுள்ளது.

    மத்திய அரசிடம் கேட்டு பெறுவதை விட்டுவிட்டு, மாநில மக்கள் மீது மேலும் கடன் சுமையை சுமத்துவது சரியா?. கடந்த 4 மாதங்களில் கர்நாடகத்திற்கு ரூ.13 ஆயிரத்து 500 கோடி ஜி.எஸ்.டி. இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இழப்பு ரூ.25 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். கடந்த 2019-20-ம் ஆண்டு மத்திய அரசின் வரி பங்கில் கர்நாடகத்திற்கு ரூ.39 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் அது ரூ.28 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதில் கர்நாடகத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி நமக்கு குறையும். மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஏன் அநீதி இழைக்கிறது?. மாநில அரசு உறுதி செய்யப்பட்ட செலவுகளை குறைக்க வேண்டும். சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலவுகளை அரசின் வருவாயில் 40 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டும். மொத்த மாநில உற்பத்தியில் 25 சதவீதத்திற்கு மிகாமல் கடன் பெற வேண்டும்.

    இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா பேசினார்.
    Next Story
    ×