search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிடிபி கட்சியின் மூத்த தலைவர் நயீம் அக்தர்
    X
    பிடிபி கட்சியின் மூத்த தலைவர் நயீம் அக்தர்

    காஷ்மீர் : 407 நாட்களுக்கு பின்னர் வீடுக்காவலில் இருந்து பிடிபி கட்சியின் மூத்த தலைவர் விடுதலை

    காஷ்மீரில் வீட்டுக்காவலில் இருந்த பிடிபி கட்சியின் மூத்த தலைவர் நயீம் அக்தர் 407 நாட்களுக்கு பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
     
    இந்த நடவடிக்கையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

    மேலும், முன்னாள் முதல்மந்திரிகள், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தற்போது காஷ்மீரில் நிலைமை சீரடைந்ததையடுத்து வீட்டுக்காவலில் இருந்த பலரும் விடுதலை செய்யப்பட்டு வந்தனர். 

    ஆனால், முன்னாள் முதல்மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் இன்னும் வீட்டுக்காவலிலேயே உள்ளனர்.

    இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்களில் ஒருவரான மக்கள் ஜனநாயக கட்சியின்  (பிடிபி) மூத்த தலைவரான நயீம் அக்தர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

    ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 407 நாட்கள் வீடுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நயீம் அக்தர் தான் நேற்று விடுதலையானதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

    Next Story
    ×