search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வப்னா சுரேஷ்
    X
    ஸ்வப்னா சுரேஷ்

    ஸ்வப்னா சுரேசுடன் நெருங்கிய தொடர்பு : கேரளாவில் மேலும் ஒரு மந்திரி சிக்குகிறார்

    கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மந்திரி சிக்குகிறார். அவர் ஸ்வப்னா சுரேசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயன் அலுவலகத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானதால் ஆளுங் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக மந்திரி ஜலீலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து அவர் பதவி விலகக்கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே, ஸ்வப்னா சுரேஷ் அழித்த டிஜிட்டல் ஆதாரங்களை என்.ஐ.ஏ அமைப்பு மீட்டுள்ளது. இதையடுத்து அவர் கூறிய வாக்குமூலத்திற்கும், கிடைத்த ஆவணங்களிலும் முரண்பாடு இருப்பது தெரியவந்தது. மேலும், கிடைத்த ஆதாரத்தில் ஒரு மந்திரியும், ஸ்வப்னா சுரேசுடன் நெருக்கமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக ஸ்வப்னா சுரேஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அமைப்பு முடிவு செய்துள்ளது. அதே சமயத்தில், சம்பந்தப்பட்ட மந்திரியிடமும் விரைவில் விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது. இதனால் கேரளாவில் ஆளுங்கட்சிக்கு மேலும் சிக்கல் உருவாகி உள்ளது.

    அதே சமயத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறிய ஸ்வப்னா சுரேசுக்கு திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு நடத்திய பரிசோதனையில் எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் உறுதி செய்தனர். 2-வது முறையாக நெஞ்சுவலிப்பதாக அவர் டாக்டரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளலாம் என டாக்டர்கள் முடிவு செய்து, ஸ்வப்னா சுரேஷிடம் அந்த தகவலை தெரிவித்தனர். ஆனால் அவர் ஆஞ்சியோ சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்ததோடு, நெஞ்சுவலிக்கவில்லை என கூறி விட்டார். நெஞ்சுவலிப்பதாக கூறி ஆஸ்பத்திரிக்கு சென்றால், ஏதாவது ஒரு வகையில் தப்பிக்க வழி கிடைக்கும் என கருதி அவர் நாடகமாடி இருக்கலாம் என பரபரப்பு தகவல் வெளியானது. பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×