search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    X
    ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்- எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மனோஜ் ஜா மனு தாக்கல்

    மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஷா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14ம்தேதி தொடங்கி, அக்டோபர் 1ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தகூட்டத் தொடரின் முதல் நாளில், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே பதவி வகித்த துணைத்தலைவர் ஹரிவன்ஷின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கான வேட்பு மனு தாக்கல் 7ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

    மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் எம்பியான ஹரிவன்ஷ், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா (வயது 53) நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவருக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    மாநிலங்களவை துணைத் தலைவரை போட்டியின்றி தேர்ந்து எடுப்பதற்கு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி முயற்சி மேற்கொண்டது. மாநிலங்களவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் இதுபற்றி பேசியது. ஹரிவன்ஷ் மீண்டும் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அத்துடன் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பீகாரைச் சேர்ந்த இரண்டு பிரதான கட்சிகளின் எம்.பி.க்கள் மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×