search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
    X
    மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

    சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு செலுத்தப்படும் - மத்திய மந்திரி தகவல்

    சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதைத்தொடர்ந்து நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஆண்டு செலுத்தப்பட்டது. ஆனால் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த லேண்டர் கருவி நிலவில் தரையிறங்கும்போது தரையில் மோதி செயலிழந்தது.

    இதைத்தொடர்ந்து சந்திரயான் 3 விண்கலத்தை இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால் இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சந்திரயான் 3-ஐ பொறுத்தவரை, இந்த விண்கலம் அடுத்த ஆண்டு (2021) தொடக்கத்தில் விண்ணில் செலுத்தக்கூடும். சந்திரயான் 2 திட்டத்தை இது தொடரும். இந்த விண்கலத்திலும் லேண்டர் மற்றும் ரோவர் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் சந்திரயான் 2-ல் இருந்தது போன்று ஆர்பிட்டர் இதில் இருக்காது’ என்று தெரிவித்தார்.

    விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திலும் கொரோனா ஊரடங்கால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறிய அவர் எனினும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 2022-ல் திட்டத்தை நிறைவேற்ற தயாராகி வருவதாகவும் கூறினார்.
    Next Story
    ×