search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சயாபகவதி அம்மன் கோவில் மூழ்கியுள்ள காட்சி.
    X
    கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சயாபகவதி அம்மன் கோவில் மூழ்கியுள்ள காட்சி.

    மழை, வெள்ள பாதிப்பால் வடகர்நாடக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

    வடகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் தற்போது மழை, வெள்ளமும் வடகர்நாடக மக்களை புரட்டி போட்டு உள்ளது. இதனால் அந்த மாவட்ட மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது.
    விஜயாப்புரா :

    விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தியில் அலமட்டி அணை அமைந்து உள்ளது. அதுபோல யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாராயணபுராவில் பசவசாகர் அணை அமைந்து உள்ளது. இந்த 2 அணைகளும் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்து உள்ளன. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை, கொய்னா அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் 2 அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் 2 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன்காரணமாக அந்த அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 லட்சம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    கடல்மட்டத்தில் இருந்து 519.76 மீட்டர் கொள்ளளவு கொண்ட அலமட்டி அணையின் நீர்மட்டம் நேற்று மதிய நிலவரப்படி 518.15 மீட்டராக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 715 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 51 ஆயிரத்து 922 கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது. இதுபோல கடல்மட்டத்தில் இருந்து 492.38 மீட்டர் கொள்ளளவு கொண்ட பசவசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மதிய நிலவரப்படி 490 மீட்டராக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 76 ஆயிரத்து 823 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 83 ஆயிரத்து 921 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதாவது 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 லட்சத்து 35 ஆயிரத்து 843 கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பாகல்கோட்டை, ராய்ச்சூர், யாதகிரி, விஜயாப்புரா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. மேலும் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களும் மூழ்கி உள்ளதால் பல கிராமங்களை இணைக்கும் சாலைகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன. கடந்த 10 நாட்களாக வடகர்நாடகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு வெள்ளம் வடியவே இல்லை. ஏற்கனவே வடகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் தற்போது மழை, வெள்ளமும் வடகர்நாடக மக்களை புரட்டி போட்டு உள்ளது. இதனால் அந்த மாவட்ட மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது.

    இதுபோல பல்லாரி மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து 497.87 மீட்டர் கொள்ளளவு கொண்ட துங்கபத்ரா அணையின் நீர்மட்டம் நேற்று மதிய நிலவரப்படி 497.62 மீட்டராக இருந்தது. அந்த அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரத்து 510 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அதே நேரத்தில் அணையில் இருந்து 10 மதகுகள் வழியாக வினாடிக்கு 66 ஆயிரத்து 707 கனஅடி தண்ணீர் துங்கபத்ரா ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் துங்கபத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக ஹம்பியில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. அங்கு உள்ள கிருஷ்ணதேவராயர் சமாதி மூழ்கியுள்ளது. ஹம்பியில் துங்கபத்ரா ஆற்றின் கரையையொட்டி உள்ள கோதண்டராம கோவிலை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. மேலும் கம்ப்ளியில் இருந்து கங்காவதி செல்லும் சாலையும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×