search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் சட்டசபை
    X
    ராஜஸ்தான் சட்டசபை

    ராஜஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான முன்மொழிவு தாக்கல்

    ராஜஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான முன்மொழிவை மாநில சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார மந்திரி தாக்கல் செய்துள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் முதல்-மந்தரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த அதிகார மோதல் எதிரொலியாக சச்சின் பைலட்டின் துணை முதல்-மந்திரி பதவி கடந்த ஜூலை மாதம் 14ந்தேதி பறிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

    ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பைலட் செயல்படுகிறார் என்றும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்றும் யூகங்கள் கிளம்பின.  ஆனால் இதற்கு பைலட் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த சர்ச்சையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

    சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் சமரசம் ஏற்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நேற்று மாலை 5 மணிக்கு முதல் மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் அவரது தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டது.

    இதனையேற்று சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கெலாட்டின் வீட்டிற்கு சென்றனர். சச்சின் பைலட்டை அசோக் கெலாட் இன்முகத்துடன் வரவேற்றார். இருவரும் கைகுலுக்கி கொண்டனர். இதன்பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த சூழலில், எம்.எல்.ஏ.க்கள் பன்வார் லால் சர்மா மற்றும் விஷ்வேந்திர சிங் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் கட்சி திரும்ப பெற்று கொண்டது.

    இதுபற்றி முதல் மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கட்சியில் சில குழப்பங்கள் நடந்து வந்தபோதிலும், நாடு, மாநிலம், மக்கள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் நலனுக்காக நாங்கள் அவற்றை மன்னிக்க வேண்டிய மற்றும் மறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வருவோம் என கூறினார்.

    இதனால், பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு சாதகம் ஆக செயல்படுவார் என்றும் அரசுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க ஆதரவு அளித்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான முன்மொழிவை சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார மந்திரி சாந்தி குமார் தாரிவால் இன்று தாக்கல் செய்துள்ளார்.
    Next Story
    ×