search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்
    X
    கோர்ட்

    வங்காளதேசத்தின் முதலாவது இந்து தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகள் பதிவு

    ரூ.3½ கோடி கையாடல் வழக்கு தொடர்பாக வங்காளதேசத்தின் முதலாவது இந்து தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
    டாக்கா:

    வங்காளதேசத்தில் சிறுபான்மையினரான இந்து மதத்தில் இருந்து முதலாவது தலைமை நீதிபதியாக கடந்த 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றவர், சுரேந்திர குமார் சின்கா. இவர், அரசுடன் ஏற்பட்ட மோதலால், 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவி விலகினார். பிறகு அரசியல் அடைக்கலம் தேடி, அமெரிக்காவில் குடியேறினார்.

    இதற்கிடையே, 2016-ம் ஆண்டு, விவசாயிகள் வங்கியில் 2 தொழிலதிபர்கள் போலி ஆவணங்களுடன் பெற்ற ரூ.3½ கோடி கடன், தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்காவின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, சின்கா, அவருக்கு நெருக்கமான 4 பேர், வங்கி அதிகாரிகள் 6 பேர் உள்பட 11 பேர் மீது ஊழல் ஒழிப்பு ஆணையம் வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில், நீதிபதி சின்கா உள்பட 11 பேர் மீதும் நேற்று டாக்கா கோர்ட்டில் நீதிபதி ஷேக் நஜ்முல் ஆலம் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை, 18-ந் தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×