search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்புலன்ஸ்
    X
    ஆம்புலன்ஸ்

    சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் கேட்டதால் ஆம்புலன்சிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி

    கொல்கத்தாவில் ஆம்புலன்சில் காக்க வைக்கப்பட்ட பெண் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கொல்கத்தா:

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கேட்ட தொகையை செலுத்த முடியாததால், சிகிச்சை கிடைக்காமல் ஆம்புலன்சில் காக்க வைக்கப்பட்ட பெண் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள தம்லுக் பகுதியை சேர்ந்த 60 வயதான அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஒரு நர்சிங் ஹோமில் சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, மகன் நசீம் கான் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து வந்தார். அந்த மருத்துவமனை நிர்வாகம் ரூ.3 லட்சம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று தெரிவித்து உள்ளது. இதையடுத்து, நசீம் கான் ரூ.80 ஆயிரம் ஏற்பாடு செய்து பணத்தை செலுத்தி தனது தாய்க்கு சிகிச்சையை தொடங்கும்படி கெஞ்சி இருக்கிறார். ஆனால் தாங்கள் கேட்ட தொகையை முழுவதுமாக செலுத்தினால் மட்டும்தான் சிகிச்சைக்கு அனுமதிப்போம் என மறுத்து விட்டனர்.

    இதைதொடர்ந்து, அபுதாபியில் உள்ள அந்த பெண்ணின் மூத்த மகன் மருத்துவமனை நிர்வாகத்தின் வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சத்தை அனுப்பி வைத்தார். தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக பணம் கேட்டு அழைக்கழித்த நிலையில், சிகிச்சை கிடைக்காமல் காக்க வைக்கப்பட்ட அந்த பெண் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக நசீம்கான் போலீசில் அந்த மருத்துவமனைக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன் பணமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்க கூடாது என்று அம்மாநில மருத்துவ கமிஷன் உத்தரவிட்ட மறுநாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×