search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசோக் கெலாட்
    X
    அசோக் கெலாட்

    19 எம்.எல்.ஏ.க்கள் இல்லாமலேயே எங்களால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் - அசோக் கெலாட்

    19 எம்.எல்.ஏ.க்கள் இல்லாமலேயே எங்களால் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என அசோக் கெலாட் பேட்டியில் கூறியுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் ராஜஸ்தானில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் சச்சின் பைலட்டின் துணை முதல்-மந்திரி பதவி கடந்த ஜூலை மாதம் 14ந்தேதி பறிக்கப்பட்டது.  அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

    இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க ராஜஸ்தானில் நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.  ஆளும் காங்கிரசில் கடந்த ஒரு மாதத்தில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு பைலட் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்ற நிலையில், இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.  அசோக் கெலாட் தனது அரசுக்கு பெரும்பான்மையை  காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த பரபரப்பு நிறைந்த அரசியல் சூழலில், அசோக் கெலாட்டிற்கு பெரும்பான்மை இல்லை என கூறி வந்த சச்சின் பைலட், திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்புக்கு பின்னர் சமரசம் ஏற்பட்டது.

    இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் முதல் மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவரது தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டது.

    இதனையேற்று சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கெலாட்டின் வீட்டிற்கு சென்றனர்.  சச்சின் பைலட்டை அசோக் கெலாட் இன்முகத்துடன் வரவேற்றார்.  இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.  இதன்பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த சூழலில், எம்.எல்.ஏ.க்கள் பன்வார் லால் சர்மா மற்றும் விஷ்வேந்திர சிங் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் கட்சி திரும்ப பெற்று கொண்டது.  இதுபற்றி கூறிய விஷ்வேந்திர சிங், உண்மை உங்கள் முன்னால் உள்ளது.  நான் காங்கிரசில் இருந்தேன்.  இருக்கிறேன்.  காங்கிரசிலேயே நான் இருப்பேன் என கூறியுள்ளார்.

    அக்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. மற்றும் மூத்த உறுப்பினரான கே.சி. வேணுகோபால் கூட்டம் நிறைவடைந்த பின்னர் கூறும்பொழுது, அனைத்தும் நன்றாகவே சென்றுள்ளது.  காங்கிரஸ் குடும்பம் ஒன்றிணைந்துள்ளது.  பா.ஜ.க.வின் மோசம் ஆன அரசியலை எதிர்த்து நாங்கள் போராடுவோம்.  சட்டமன்றத்தில் நாளை காங்கிரஸ் கட்சியானது ஒன்றாக நிற்கும் என கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து முதல் மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த 19 எம்.எல்.ஏ.க்கள் (சச்சின் பைலட் மற்றும் அவரை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள்) இல்லாமலேயே எங்களால் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும்.  ஆனால், அது எங்களுக்கு மகிழ்ச்சி தராது.  நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வருவோம் என கூறினார்.
    Next Story
    ×